அமிழ்து



"செட்" ஆக போகும் 37 எம்.பி.க்கள்!

Monday, May 19, 2014




நான் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் போது, எங்களது உயிரியல் வாத்தியார், "நம்ப பசங்க எல்லாம் செட்டா போகணும்னு சொல்லுவார், எங்கேனா, மெடிக்கல் காலேஜுக்கு"... அப்ப, அத இந்த காதில வாங்கி அந்த காதிலேயே விட்டு விட்டோம்... ஆனா, இப்ப தான் செட்டா போறத பத்தி யோசிச்சா அதோட மகிமைப் புரியுது...

எனக்கெல்லாம் ஸ்கூலிலிருந்து புதுசா கல்லூரியில் சேர்ந்து போது, முதல் சில மாதங்கள் இனம் புரியாத தயக்கம், பயம் எல்லாம் இருந்தது. எல்லாமே புது ஆளுங்க... யாருக்கிட்டா பேசுறது, எப்படி பேசுறது அப்படினு... பழகிற வரைக்கும் ஒவ்வொரு நாளையும் கல்லூரியில் கடத்துறது ஒரு யுகத்த கடத்துற மாதிரி இருக்கும்.

ஆனா, எங்க பள்ளிக்கூட வாத்தியார் சொன்ன இந்த மாதிரி செட்டா போயிருந்தா அந்தப் பிரச்சினை எல்லாம்  இருந்திருக்காதோ என்னவோ.

ஆனால், இந்த பிரச்சினை எல்லாம் இல்லாமால், தமிழகத்தில் இப்போ

சமீபத்தில் செட்டா போகப் போறது அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர். கிட்டத்தட்ட எல்லாருமே புது முகம் மூவரைத் தவிர்த்து... இவங்களுக்கெல்லாம் புது டெல்லி, பாராளுமன்றம் எல்லாம் புதுசா இருக்கும், பாஷை புரியல என்ற கஷ்டமெல்லாம் வேண்டாம்.

ஜெயித்த அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் எல்லாம் டூர் மாதிரி ஒண்ணா போய் ஒண்ணா வரலாம்... ஒத்தையா, ரெட்டையா மாட்டிக்கிட்டு புது காலேஜுல முழிக்கிற மாதிரி முழிக்க வேண்டிய அவசியமில்லை, கூட்டமே கூட இருக்கு... பொழுது போக்குக்கும் பிரச்சினை இல்லை...பக்கத்தில இருக்கிற இரத்தத்தின் இரத்தத்துக் கிட்டவே பேசிக்கலாம். ரொம்ப போர் அடிச்சா தனியா சிக்குற ஹிந்தி பேசுற எம்.பி.யக் கூட ராகிங் பண்ணலாம.

இதையெல்லாம் விட பெரிய விடயம், சட்டமன்றத்தில் உள்ள இவர்களது நண்பர்கள் போல, அம்மாவை "அசத்தப் போவது யாரு, அமைச்சர் பதவிப் பெறப் போவது யாரு" எனத் தொலைக்காட்சிப் போட்டி நடத்தத் தேவையில்லை. அமைச்சர்கள் போல தலைக்கு மேல் கத்தித் தொங்கும் நிலையும் இல்லை. அது ஏன், அம்மாவை அகம் குளிரச் செய்யப் புதுப் புது வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முதல் நாள் இரவு முழுவதும் தங்களுடைய எடு பிடிகளைப் பிழியும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.-க்களின்

நிலை மாதிரி கூட இல்லை.

வெக்கேஷனுக்கு பாட்டி வீட்டுக்கு வந்தப் பள்ளிப் பிள்ளைகள் போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஜாலியாக. அம்மாவின் கண் பார்வையில் இல்லை. எப்படி வேண்டுமானாலும் உட்காரலாம். அடிக்கடி லொட்டு, லொட்டு என்று மேசையத் தட்ட வேண்டிய அவசியமில்லை. யாராவது அம்மாவைப் புகழ்ந்தால் கூட முகத்தை மிகவும் மலர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டிய தொந்தரவும் இல்லை.

இதைத் தவிர்த்து தி.மு.க., தே.மு.தி.க. போன்றவை இல்லை. அவர்கள் என்னவாவது சொன்னால், அவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நான் உண்டு என் வேலை உண்டு என நாடாளுமன்றம் கூட்டத் தொடர் முடிந்தவுடன் அவரவர் நண்பர்களுடன் கிளம்பி ஊர் வந்து விடலாம் வெக்கேஷனை முடித்துக் கொண்டு!


ஹையா செம ஜாலி!

Labels: , , , ,

எம்.எல்.எம்-மும், மசால் தோசையும், பின்னே நானும்!

Wednesday, April 16, 2014


சற்றேறக்குறையப் பத்து வருடங்களுக்கு முன்பு, வழக்கம் போல ஒரு சாகரில் இரவு உணவை, பெங்களூரை ஒரு நாடாக்கினால் அதன் தேசிய உணவாகுவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ள மசாலா தோசையுடன் முடித்துக் கொள்ளலாம் என்று நுழைந்தேன்.


Self-Service ஹோட்டலில், கூப்பன் வாங்குவதிலிருந்து மசாலா தோசைக் கையில் கிட்டும் வரை இந்தியாவின் மக்கட் தொகைப் பெருக்கத்‌தை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்க, தோசையை எடுத்துக் கொண்டு ஆள் அரவம் கொஞ்சம் குறைந்து உள்ள ஒரு வட்ட வடிவ நெஞ்சுயுர மேசையத் தேர்ந்தெடுத்தேன்.


பண்டைத் தமிழகத்தில் போருக்குச் செல்லும் வீரனுக்கு வெற்றித் திலகம் இடுவது போல, முன்பெல்லாம் பெங்களூரின் உணவு விடுதிகளில், மசாலா தோசை நமது கைக்கு வருமுன் சப்ளையர் வெண்ணெயால் தோசையின் மேல் ஒரு வெள்ளைத் திலகமிட்டு அனுப்புவார், திலகமிட்ட தோசைகள் திரும்பி வராது என்ற போதிலும்.

தோசையின் சூட்டில், வெண்ணெய் உருகி எங்கே செல்வது எனத் தெரியாமால் தங்கள் கூட்டணியை உடைத்துக் கொண்டு இங்கும் அங்கும் இலக்கில்லாமல் தனித் தனியாக ஓட ஆரம்பிக்கும்.

ஒரு கால் பந்து மைதானத்தைப் பறவைப் பார்வையில் பார்ப்பது போல இதையெல்லாம் கவனித்துக் கொண்டே வலது கை பக்கவாட்டில் உள்ள தோசையை பிட்டு ஒரு சிறு துண்டை வாயில் போடலாம் என்று எத்தனித்த போது தான், நமது அருகில் நெருக்கமாக ஒருவர் வந்து நின்றார். வந்தவர், ஒரு கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலை கையில் வைத்திருந்தார்.

திடீரென்று என்னிடம், பெங்களூருவின் பருவ நிலைப் பற்றி  ஆங்கிலத்தில் கவலைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்றைக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குக் கூட தெரியும் காரணங்களை எடுத்து வைத்தார். பின்பு, Global Warming அது இது என பல விஷயங்களைத் தொட்டுக் கொண்டிருந்தார்.


நமக்கோ, இவரிடம் பேச்சுக் கொடுத்தால், நமது தோசையின் வார்ம் போய்விடுமோ என்றப் பதட்டத்தில் ஓ , ஆங், ஊங் என்று ஆமோதித்துக் கொண்டிருந்தேன். பின்னர், என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டார், எங்கு வேலை, சொந்த ஊர் என. எதை நான் சொன்னாலும் அதை வெகுவாகப் பாராட்டினர். அந்த கம்பெனியா க்ரேட்... அந்த ஊரா சூப்பர்... அதுவும் இல்லமால், பெருமையாக இரண்டு வார்த்தைகள் வேறு சொன்னார் எதைச் சொன்னாலும்.


நானோ பெங்களூரு வந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. ஆகா, இந்த ஊர் மக்கள் 'எவ்வளவு friendly-யாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

 இப்படியாக போய்க் கொண்டிருந்த சம்பாஷனையின் ஊடே நமது கைப் பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார் அந்த புது நண்பர். தோசை காலியாக எங்களது நட்புக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைக்க நேர்ந்தது. பின்பு இருவரும் பரஸ்பரம் விடைப் பெற்றுக் கொண்டு, நான் எனது இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தேன்.


அந்த வாரயிறுதியில், எனது கைப் பேசிக்குப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாரென்றுப் பார்த்தால் அட, நமது ஹோட்டல் நண்பர் தான். பரஸ்பரம் குசலம் விசாரித்து விட்டு இவர் நம்மிடம் என்னப் பேசப் போகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், நமக்கு ஒரு புதிய யோசனையை வைத்தார். நீங்கள் எப்போது ஓய்வுப் பெறப் போகிறார்கள் என்றார். வேலையில் சேர்ந்து மொத்தமாகவே இரண்டரை வருடங்களானவனிடம், ஓய்வைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது. 58 என்று சொல்லி வைத்தேன். உங்களுக்கு அதற்கு முன்பே ஓய்வுப் பெற வேண்டுமானால் முடியுமா என்று அடுத்த பவுண்சரை விட்டார். இது எல்லாமே புதுசாயிருக்கே..என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே இன்று மதியம் ஒரு கூட்டம் இருக்கிறது வந்து விடுங்கள் என்றார்.


இந்த நட்புக்கு வயதே ஒரு வாரம் தான் என்றாலும் "நட்பு"-க்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களாக(!) பார்த்து வளர்ந்த நமக்கு அதைத் தட்ட முடியவில்லை.


மதிய உணவை முடித்துக் கொண்டு, சமர்த்தாக அவர் சொல்லிய இடத்திற்கு சொன்ன நேரத்திற்குச் சென்று விட்டேன். அது ஒரு வீடு... நமது நட்பு நம்மைக் கண்டு கொண்டுவிட்டார். அங்கே அவரைப் போல சிலரும் என்னைப் போல சிலரும் அந்த வீட்டருகே உலாத்திக் கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் உலாத்த ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில், நமது நட்பு வந்து உள்ளே அமரச் சொன்னார்.


என்னைப் போன்ற தற்காலிக நட்புகள் முன்னே உட்கார வைக்கப்பட்டோம். பின் வரிசையில் எங்களைப் பிடித்து சாரி கூட்டி வந்தவர்கள் உட்கார்ந்துக் கொண்டார்கள்.


ஒரு இளைஞர் பாடம் எடுக்க ஆரம்பித்தார்... direct marketing, விளம்பரம், வாழ்கையில் ஓய்வு, நமது விருப்பங்களை எந்த ஒரு பொருளாதார கட்டயாமும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வது எப்படி..என வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் விரும்பும் அனைத்தையும் தொட்டுச் சென்றார்.

இவை எல்லாவற்றிருக்கும் நாம் செய்ய வேண்டியது சில நண்பர்களை இதில்
இணைத்து விடுவது தான் என்று அதையும் அவர் எளிதாக விளக்கினார். நாம் இதெல்லாம் கல்லூரிக் காலத்திலேயே பார்த்து இருந்ததால் இதைப் பற்றி முன்னமே நமக்கு ஒரு பார்வை இருந்தது.  நமக்கு நம்பிக்கையும் இல்லை.

கூட்டம் முடிந்த உடன் நமது நட்பு உடனேயே சேரச் சொல்லிக் கேட்டார். இது உண்மையிலேயே பலன் அளிக்கலாம். ஆனால், என்னால் முடியும் என்ற நம்பிக்கையில்லை என்றேன். சில வாரங்கள் தொடர்ந்து அழைத்தார். நம்மால் முடியாது என்று நாசுக்காக சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது காலத்தில் அந்த தற்காலிக நட்புக்கு முற்றுப் புள்ளி அந்த நண்பராலேயே ஒரு நல்ல நாளில் வைக்கப்பட்டது.

இப்படியாக பத்து வருடம் கடந்த விட்ட நிலையில்...

கடந்த வாரம் ஓரிரவு உணவிற்காக ஒரு சாகர் உணவு விடுதியை அடைந்தேன். மசாலா தோசையை வாங்கி உண்ண ஆரம்பித்த போது தான், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் போலவே ரிபீட் ஆக ஆரம்பித்தது. இள வயது ஆள் ஒருவர் அதே பழைய பஜனையை ஆரம்பித்தார். அதுவும் பெங்களூரின் கால நிலை மாற்றத்திலிருந்து ... எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக விடைப் பெரும் முன், எதிர்ப்பார்த்ததைப்  போலவே கைப் பேசி எண்ணைக் கேட்டார்.

எம்.எல்.எம்-மிற்கு தானே கேட்கிறீர்கள் எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொன்னேன். இந்த ஆள் புதியவர் போல... இப்படிக் கேட்டவுடன் மிகுந்த ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்...

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மசாலா தோசைக்கு வைக்கப்படும் வெண்ணை இப்பொழுதெல்லாம் வைக்கப்படுவதில்லை ...

மசாலாவின் உள்ளே வைக்கப்படும் சிறு முந்திரிப் பருப்பு, கடலை போன்றவை வைக்கப்படுவதில்லை ...

ஏன், மசாலாவின் அளவுக் கூட குறைந்து விட்டது

மசாலா தோசை மட்டும் அல்ல, நானும் கூட பல மாற்றங்களைக் கண்டு விட்டேன் ... எடைக் கூடியிருக்கிறது ...

அந்த காலக் கட்டங்களில், தலையில் கின்னஸ் அளவிற்கு முடியில்லாமல் இருந்தாலும் கூட, முடி இல்லை என்று சொல்லாத அளவிற்கு இருந்த எனது தலைக் கூட மேலே சில சொத்துகளை இழந்து புது பெயரை வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது...

இப்படியாக நிறைய மாற்றம் நம்மைச் சுற்றி...

ஆனால், இந்த எம்.எல்.எம். ஆட்கள் மட்டும்....?!

Labels: , ,

பஸ் ஸ்நேகம்?!

Friday, August 23, 2013



நண்பர்களுடன் தங்கியிருந்த காலத்தில், திருச்சிக்கு செல்ல டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யவில்லயெனில், நண்பர்களுடன் சேர்ந்து ஓசூரிலிருந்து திருச்சிக்கு, இரவு ஒன்பதரை மணிக்குக் கிளம்பும் 3+2 பேருந்தில் செல்வது தான் வழக்கம்.

அடித்துப் பிடித்து பெங்களூரிலிருந்து ஓசூருக்கு எப்படியாவது ஒன்பதரை மணிக்கு சென்று விடுவோம். பேருந்து திருச்சிப் போகும் வரை ஜக ஜோதியாக இருக்கும். இந்த பேருந்தில் செல்லும் போது தான் இளைய தளபதி அவர்களின் திறமையை கில்லி படத்தின் மூலமாகவும், இயக்குனர் விக்ரமன் அவர்களின் படங்களின் பின்னணி இசையின் வீரியம் "உன்னை நினைத்து" படத்தின் மூலமாகவும் புரிந்தது. படங்களைத் தயாரித்தவர்கள் கூட அத்தனை முறை பார்த்திருப்பார்களா என்பது கூட சந்தேகம் தான். எப்படியும் ஓட்டுனர் இரண்டரை படங்களைப் போட்டு விடுவார்.

திருச்சி நெருங்க நெருங்க எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களை போட ஆரம்பித்து விடுவார். அப்பொழுது தூங்க ஆரம்பிக்கும் நமக்கு எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களைக் கேட்டவுடன் இரண்டு லோட்டா தன்னம்பிக்கை டானிக்கை உள்ளே விட்டது போல இருக்கும். பின்பு எப்படி தூங்குவது?

இப்படி ஒரு நாள், ஓசூரில் நண்பர்களுடன் ஏறி 3 பேர் அமரக் கூடிய சீட்டில் அமர்ந்த பொழுது, எங்களுக்கு நேராக இருந்த 2 பேர் உட்காரும் இருக்கையில் ஒரு வயதான தாத்தா மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். வண்டி கிளம்பு முன் ஒரு இளைஞன் வந்து அந்த தாத்தா அருகில் உட்கார முனைந்தான்.

உட்காரும் முன் தாத்தாவை அவன் இன்னும் கொஞ்சம் ஜன்னலோரம் தள்ளி உட்காரச் சொன்னான். தாத்தா ஏதோ முணு முணுக்க, பதிலுக்கு இளைஞனும் முணு முணுக்க இந்திய எல்லைக்குள் வந்துவிட்ட சீன இராணுவத்தினை பார்ப்பது போல பார்த்து விட்டு அவன் அமர சற்று ஒதுங்கினார்.

சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியது. அது ஒரு தென் மேற்கு பருவக் காற்றுக் காலம். மழையும் வெளியே தூறிக் கொண்டிருந்தது. பேருந்திற்குள் ஏற்கனவே மழைப் பெய்திருந்தது. பேருந்து கிளம்பியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக குளிர் காற்று அனைவரையும் தழுவத் தொடங்கியது. ஜன்னலை இழுத்து மூட முயன்று கொண்டிருந்தார்கள் சிலர். சிலர் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள தங்களது பையிலிருந்து ஏதாவது கிடைக்குமா என்றுத் துலாவிக் கொண்டிருந்தார்கள்.

தாத்தா குளிருக்கு இதமாக போர்த்‌திக் கொள்ள ஒரு கம்பளியை வைத்து இருந்தார். படம் ஓட ஆரம்பித்தது. சிலர் தூங்க ஆரம்பித்தார்கள். தாத்தா போர்த்‌திக் கொண்டார். அருகில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞன் தனது இரு கைகளையும் குறுக்காக தனது உடம்பில் கட்டிக் கொண்டு குளிருக்கு கைதியாகி இருந்தான்.

கிருஷ்ணகிரி அருகே மோட்டலில் வண்டி நின்ற போது தாத்தாவும் இளைஞனும் இறங்கவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இப்பொழுது தாத்தாவுடன் நெருங்கி இருந்தான் இளைஞன். அவரது தோள் மேலே சாய்ந்திருந்தான். குளிருக்கு இதமாக இருந்திருக்கும் போல.


இன்னும் சிறிது தூரம் போக, தாத்தாவின் கம்பளியை கொஞ்சமே கொஞ்சமாக அவன் போர்த்தியிருந்தான்.

சேலம் தாண்டியது இப்போது பார்த்தால் தாத்தா இளைஞன் மேல் சாய்ந்திருந்தார். தாத்தாவின் கம்பளி இன்னும் கொஞ்சம் பகிரப்பட்டிருந்தது.

தொட்டியம் தாண்டியது, தாத்தாவும் இளைஞனும் உண்மையிலேயே தாத்தா, பேரன் ஆகியிருந்தார்கள். தாத்தாவின் போர்வைக்குள் இப்பொழுது இரண்டு பேருமே சென்று விட்டார்கள். தாத்தாவிற்கு பேரனால் இப்பொழுது எந்தத் தொந்தரவும் இல்லைப் போல. தாத்தாவும், பேரனும் நன்றாகத் தூங்கி விட்டார்கள்.

ஒரு வழியாக எம்.ஜி.ஆர். பாட்டு ஓட ஆரம்பித்து திருச்சியும் வந்தது. மத்தியப் பேருந்து நிலையம் வந்தவுடன் தாத்தாவும், பேரனும் இறங்கி ஆளுக்கொரு பக்கமாக சென்று விட்டார்கள், ஒன்றுமே பேசிக் கொள்ளாமல்!

ஒரு மாலை வேளையும், மயங்கிய வாகனமும்!

Sunday, July 28, 2013


மாலை ஆறு மணிக்கு மேல் பீன்யா பகுதியிலிருந்து கிளம்பி நாகவரா-விற்கு திரும்ப நினைத்த போது, என்னுடைய இரு சக்கர வாகனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. "ஆட்டோ ஸ்டார்ட்" பட்டனை அமுக்கினால் காச நோய் வந்தவரின் கடைசி இருமல் போல இருமி விட்டு அடங்கியது. "ஆட்டோ ஸ்டார்ட்" தன்னால் எதுவும் முடியாது என்பதை உறுதி செய்ததால், "கிக்"கரை முயற்சி செய்யலாம் என்று கிக்கரை தேடினான்.

கிக்கர் கிடைத்தவுடன் காலால் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன். மிதித்தேன் மிதித்தேன் நான் டயர்டாகும் வரை மிதித்தேன். ஆனால், நியூட்டனின் மூன்றாம் விதியை தவறு என நான் முடிவு செய்யும் தருணமாகவே அது அமைந்தது. வண்டியிடமிருந்து எந்த ரியாக்ஷ்னும் இல்லை.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன், பாஞ்சு அடிச்சு பத்தரை டன் என்று சிங்கம் ஒன்று, இரண்டு என பஞ்ச்-களை உறுமிக் கொண்டே உதைத்தாலும் நாம் என்ன சூர்யாவா இல்லை, அது தான் என்ன சிங்கம் வில்லன்களா... தான் எதுவுமே செய்யாதது போல் நிற்கும் கரகாட்டக்காரன் "நாதஸ்" போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தது. எனக்கிருக்கும் தம்மாத்துண்டு வாகனவியல் அறிவை வைத்துக் கொண்டு ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்த முயன்று கொண்டிருந்தேன்.

இந்த விளையாட்டில் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது. நன்றாக இருட்ட ஆரம்பித்தது. ஞாயிறு வேறு. எங்காவது மெக்கானிக் ஷாப் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன். இருந்தாலும் இந்த ஞாயிறு மாலை நேரத்தில் திறந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகம்.  இப்பொழுது எனக்கு எந்த பிரச்சினையும், காஷ்மீரிலிருந்து  காவிரி வரை எதுவுமே பிரச்சினையாகவே தெரியவில்லை. எனது இரு சக்கர வாகனத்தை உயிர்பிப்பது தான் நாட்டின் தலையாய பிரச்சினையாக தோன்ற ஆரம்பித்தது. 108 ஆம்புலன்ஸ் போல, இது போன்ற இலவச  வசதியை சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு 118 என்றோ 119 என்றோ ஒரு எண்ணைக் கொடுத்து எக்ஷ்டண்ட் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இந்த யோசனையிலேயே கொஞ்ச தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போதே ஒரு கடை கண்களில் பட்டது. எதிர்பார்த்ததைப் போல தமிழரின் கடை தான். விசயத்தைச் சொன்னதும், தான் சிறிது நேரம் இருப்பதாகவும் வண்டியைத் தள்ளி வரும்படி கூறினார். என்னை விட கிட்டத்தட்ட ஒன்றே கால் மடங்கு கூடுதலாக இருக்கும் வண்டியையும் கூடவே என்னுடைய எடையையும் சேர்த்து திரும்பவும் கடைக்கு வந்து சேர்ந்தேன்.

கைதேர்ந்த மருத்துவர் போல பார்த்தவுடனேயே பிரச்சினையைக் கண்டறிந்து விட்டார். நாளை தான் கிடைக்கும் என்றார். அவரிடம் "ஐயன்மீர், நான் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டும், ஆதலால் இப்பொழுதே ஏதாவது செய்யுங்கள் என்றேன்" உட்சபட்ச மரியாதையுடன். என்னுடைய கோரிக்கையை ஏற்ற அவர் சற்றே முயன்று ஸ்டார்ட் செய்து விட்டார். ஆனால் மென் பொருளாளர்கள் "நோன் இஷ்யு" என்று சொல்லியே மென் பொருட்களை வெளியிடுவது போல, நான் ஸ்டார்ட் எடுத்துக் கொடுப்பேன் நீங்கள் எங்கும் நிற்காமல் சென்று விடுங்கள். நடுவில் எங்காவது நின்று விட்டால், திரும்பவும் எடுக்க முடியுமா என்று கியாரண்டி இல்லை என்று சொல்லி விட்டார்.

ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இன்னொரு பக்கம் ஒரு சவாலையும் வைத்து விட்டார். வண்டியை எடுத்து விட்டேன். சிறிது தூரம் சென்றவுடன் ஸ்பீட் படத்தின் மூன்றாம்  பாகத்தில் நானே நடிப்பது போல உணர ஆரம்பித்தேன். தென் மேற்கு பருவக் காற்றின் கைங்கரியத்தால் பொத்தலாகிப் போன சாலையின், ஒவ்வொரு குழியிலும் ஏறி இறங்கும் போதும் மெக்கானிக் வார்த்தைகள் ஞாபகம் வந்த வண்ணம் இருந்தது. அந்த வழியில் பல முறை வந்திருக்கிறேன்... ஆனால், எப்பொழுதுமே என் கன்ட்ரோல் இல்லாமல் வண்டி நின்றதில்லை. இருந்தாலும், ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாலையோர மரங்களும், கடைகளும் பின்னோக்கி செல்லச் செல்ல எனது பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து, வீட்டை அடைந்தவுடன் பூஜ்ஜியமாக ஆனது.

ஒரு வழியாக வண்டியை நானே ஆஃப் செய்து விட்டு வீட்டுக்குள் போக நினைக்கும் போது, மெக்கானிக் சொன்னது சரிதானா என சோதித்துப் பார்க்க தோன்றியது... சாவியைத் திருகி, ஆட்டோ ஸ்டார்ட் பட்டனை அமுக்கியவுடன் வண்டி மீண்டும் கரகாட்டக்காரன் நாதஸ் போஸுக்கு மாறியது!

Labels: ,

சிங்கம்-2 பார்த்த அனுபவங்கள்...

Sunday, July 07, 2013


ரொம்ப லேட்டாக படத்துக்கு செல்ல நினைத்ததால், பக்கத்திலிருக்கும் ராக்லைன் மல்டிப்ளெக்சில் டிக்கெட்டுகளைத் தேடிய போது, இரண்டு திரையில் ஓடினாலும் இரவு 9:30 மணி மற்றும் 10:05 மணி இரண்டு காட்சிகளுமே கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது... கடைசியாக 10:05 காட்சிக்கு ரிசர்வ் செய்தாகிவிட்டது...

9:45-க்கு அங்கே சென்றால் பார்கிங் இடம் நிரம்பி வழிந்தது... ஒரு மாதிரியாக வாகனத்தை நிறுத்தி விட்டு மேலே சென்றால், முந்தைய காட்சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. தமிழர், கன்னடியர், தெலுங்கர், மலையாளி என அனைவரும் வந்திருந்தனர். கதவுக்கு வெளியே  எல்லோரும் காத்திருந்தோம்...

ஒருவர் கதவைத் திறந்த உள்ளே செல்ல முயன்ற பொழுது உள்ளேயிருந்து qube சவுண்ட் சிஸ்டமில் உஃப், புஃப், பஃப் என சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது... டி.வி. ட்ரைலரில் "ஒரு பயலும் தப்ப முடியாது" என்று சூர்யா கர்சித்தது மைல்டாக ஞாபகம் வந்து படம் பார்ப்பவர்களையும் விட மாட்டார் என்று கன்பார்ம் செய்தது...

ஒரு வழியாக உள்ளே சென்று  திரையிலிருந்து 4-வது வரிசையில் அமர்ந்தோம். சூர்யா காலையும், கையையும் தூக்கி நடக்கும் போதும் அடிக்கும் போதும் 4-டி இல்லாமலேயே நம்மீது அடி இறங்குவது போல இருந்தது...

இடைவேளைக்கு முன்பே திடீரென படத்தை நிறுத்தி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பு வெளியானது... சிங்கம் 2 உள்ளேயிருக்க, இன்னொரு சிங்கம் வெளியே இரசிகக் கண்மணிகள் பார்கிங் கிடைக்கமால் அவசரத்தில் சாலையிலேயே நிறுத்தி விட்டு வந்த கார்களை அள்ளிக் கொண்டு செல்வதை அறிவித்தார்கள். இரண்டாம் காரின் எண்ணை வாசித்துக் கொண்டிருந்த போதே இரசிகர்கள் பொறுமையிழந்து படத்தைப் போடச் சொன்னார்கள்.

இதுவரை துரைசிங்கம் திரையில் சட்டத்திற்கெதிராக நடப்பவர்களை துவம்சம் செய்தததை ஆர்வமுடன் இரசித்துக் கொண்டிருந்த எங்கள் வரிசையில் இருந்த ஒருவரின் காரின் எண்ணும் படிக்கப்பட, அள்ளிச் சென்ற காவல் துறையினரை வசவிக் கொண்டே, ஒரு கண்ணில் துரைசிங்கத்தின் சாகசத்தைத் தவற விடாமல் பார்த்துக்கொண்டே சென்றார்.

மீண்டும் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திற்குள்ளாகவே திரும்பவும் நிறுத்தி விட்டு கார்களின் எண்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது, ஏற்கனவே திரையில் பார்த்த துரைசிங்கத்தின் பஞ்ச் டயலாக்குகளும், அவரது ஆக்ஷ்னும் சேர்ந்து எங்களது இரத்தத்தின் சூட்டை ஒரு இரண்டு டிகிரி ஏற்றியிருக்க, ஒட்டு மொத்தமாக எல்லா பொது ஜனங்களும் சேர்ந்து அவரவர் மொழிகளில் இந்த அநியாயத்தை ஓ ஓ ஓ என்று கத்தி தட்டிக் கேட்டோம்.

ப்ரொஜெக்டர் பின்னால் உட்கார்ந்திருந்த ஆப்பரேட்டருக்கு மேலே இருந்து பார்த்தப் போது ஒரு நானூறு துரைசிங்கங்கள் ஒன்றாக கர்சித்து நிற்பது போல இருந்ததோ என்னவோ உடனே படத்தைப் போட்டு விட்டார்.

இடைவேளையிலும் விடாமால் ஒரு துண்டுச் சீட்டில் எண்களை எழுதி இருக்கையில் உட்கார்ந்திருந்த அனைவரிடமும் காட்டி, அவர்கள் அந்த கார்களுக்கு சொந்தக்காரர்களை கண்டறிய கஜினி முகமது போல எங்களை நோக்கி படையெடுத்த வண்ணமே இருந்தார்கள்.

இதற்கிடையே படமும் நகர்ந்த வண்ணம் இருந்தது. முடிவில் துரைசிங்கம் தான் சபதம் செய்ததைப் போல டேனியை தென் ஆப்பிரிக்காவில் கைது செய்து இந்தியா கொண்டு வந்து, அனுஷ்காவைப் பார்த்ததும் டூயட் பாடப் போகிறார் என்ற ஒரு இக்கட்டான நிலையில் படம் முடிந்தது.

அதிர்ஷ்டவசமாக, துரைசிங்கம் சொன்னதைப் போலல்லாமால் அவரிடமும் தப்பித்து, வாகனத்தை தவறான இடத்தில் நிறுத்தி ஒரு சிலரைப் போல வெளியே நின்ற லோக்கல்  சிங்கத்திடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து, ஒன்றரை மணிக்கு பத்திரமாக வீடு வந்து சேர்ந்து, படுத்தால்... சிங்கம் 3-யும் ஹரி எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், சின்னத்திரையின் நாதஸ்வரம், தென்றல் போன்ற மெகா சீரியல்கள் போல, பெரிய திரையில் மெகா சினிமாக்களாக எடுத்து தமிழில் ஒரு ட்ரண்ட் உருவாக்கப் போகிறாரோ என்று  தோன்றிய சந்தேகத்திலிருந்து மட்டும் தப்ப முடியவில்லை...:)

சாவி..!

Thursday, June 06, 2013
சாவி..!




சாவியைத் தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் தேடாத மனிதன் உண்டா...? பூட்டைக் கண்டறிந்த நாள் முதல் மனிதன் சாவியைத் தேட தொடங்கி விட்டிருப்பான். நான் மட்டும்  விதி விலக்கா என்ன...!

சாவிகள் தான் எப்பொழுதுமே தேடப்படும் பொருளாய் இருக்கின்றன. என்னைப் போல சாவிகளைத் தேடுவோரை விட பூட்டுகளைத் தேடுவோர்  குறைவே... பூட்டுகளும் கதவிலேயே வருவதால் அதில் சிக்கலில்லை. வீட்டுச் சாவி என்றால் பூட்டைத் திறந்தவுடன் சாவியை மறந்தே விடுவோம்..மீண்டும் பூட்ட நினைக்கும் போது தான் சாவியின் ஞாபகம் நிழலாடும்...

சாவிகளின் பிரச்சினை என்னவென்றால், இங்கே தான் வைத்தது போல் இருக்கும், ஆனால் அந்த இடத்தில் இருக்காது...!

ஒன்றுக்கு இரண்டாக, இரண்டாக என்ன மூன்றாக சாவிகள் இருந்தாலும், மூன்றுமே நம்மைப் பார்த்து "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி" என்று எங்கோ ஒளிந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கும். அதுவும் அவசரத்தில் கிளம்பினால் கண்டிப்பாக அவை கண்ணில் படவே படாது.

இப்படி அவசரத்தில் கிளம்பும் போதெல்லாம் நம்மைப் போன்று சாவியைத் தேடிய மனிதனால் தான் பூட்டும் போது சாவித் தேவையில்லை என்ற வகை பூட்டு கண்டறியப்பட்டிருக்குமோ... ஆனால் அந்த மனிதனுக்கு, வீட்டுக்குள்ளேயே சாவியை வைத்து பூட்டிச் சென்று திரும்பி வந்து திணறியவர்களின் வரலாறு சொல்லப்பட்டதா என்று தெரியவில்லை.

நம்மைப் போன்ற மனிதனின் இந்த மறதி, சாவியே தேவையில்லாத எண்களை வைத்து இயங்கும் பூட்டையும் கண்டு பிடிக்க வைத்து விட்டது. ஆனால் அது மட்டும் பிரச்சினையைத் தீர்த்ததா என்ன? நம்மைப் போல சாவியை மறப்பவர்களுக்கு எண்கள் எல்லாம் எம்மாத்திரம்...!

பூட்டுகள் எப்போதுமே பார்ப்பதற்கு முரடன் போல தெரிந்தாலும், அவைகள் அப்பிராணிகளாகவே எனக்குத் தோன்றும். யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை அனுபவிப்பது போல, பூட்டிய வீட்டின் சாவி எங்காவது ஒளிந்து கொண்டு கண்டுபிடிக்க முடியாவிட்டால், முதலில் அடி வாங்குவது பூட்டுகள் தான். சுத்தியால் நெளிக்கப்பட்டும், கத்தியால் அறுக்கப்பட்டும் தனது கம்பீரத்தை இழந்து போகும்.

சாவிகள் தொலைந்து விட்டு நம்மை உற்றார் உறவினர்கள் கடிந்து கொள்ள நேரிட்டாலும், சாவிக்கு நாம் கொடுக்கும் சொகுசு பூட்டுக்குக் கொடுப்பதில்லை. நாம் போகுமிடமெல்லாம் சாவியையும் கொண்டு சென்று விடுகிறோம். ஆனால் எவ்வளவு விலையுயர்ந்த பூட்டாய் இருந்தாலும் கடைசியில் தொங்கப் போவது வீட்டின் கதவினிலே தான். அதை எடுத்துக் கொண்டு நாம் சுற்றுலாவா செல்ல இயலும்?

நம்மைப் போன்ற ஆட்கள் தமது வாழ்நாளில் வீட்டுச் சாவியைத் தேடுவதிலேயே ஒரு சதவீதத்தையாவது கழித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்...ஆனால், கமுதி அருகேயுள்ள மீட்டான்குளம் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே வைப்பதில்லை என்கிறார்கள்... அப்படியெனில் அவ்வூர்காரர்களுக்கு அந்த ஒரு சதவீதம் மிச்சப்படுகிறது.

ஆனால் இந்த சிக்கல் எல்லாம் நமது மூதாதையரான ஆதி மனிதர்களுக்கெல்லாம் இல்லவே இல்லை. எப்பொழுது, நான், எனது என்ற சுய நலச் சிந்தனை தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே மனிதன் பூட்டைத் தேடி ஓட ஆரம்பித்து, நமக்கும் முடியாத ஒரு வேலையையும் வைத்து விட்டான்!

கர்நாடகத் தேர்தல் - 2013

Sunday, May 05, 2013


இன்று கர்நாடகத் தேர்தல். தமிழ் நாடு போலல்லாமல் இங்கு எந்தக் கூட்டணியும் இல்லை.

பி.ஜே.பி., காங்கிரஸ் என இரு தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சியாகிப் போன ஜனதா தள் (மதச்சார்பற்றது), எட்டியூரப்பா கட்சியான  கே.ஜே.பி, ரெட்டி சகோதரர்கள் பின்புலமுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என எல்லோருமே கிட்டத்தட்ட 224 தொகுதிகளிலும் தனித்தனியாகத் தான் போட்டியிடுகிறார்கள்.

கம்யுனிஸ்டுகளுக்கு இங்கு பலம் இல்லை. தமிழகம் போல் சாதிக் கட்சிகளுக்கும் அதிக செல்வாக்கில்லை. காரணம், பலம் பொருந்திய லிங்காயத்துகளும், வொக்கலிக்காகளும் இரண்டு தேசியக் கட்சிகளிலும் இருக்கின்றனர். மான்டியா பகுதிகளில் வாழும் கௌடாக்களை ஜனதா தள் (மதச்சார்பற்றது) கவருகிறது.

ஜனதா தள்  (மதச்சார்பற்றது) தவிர்த்து இங்கு பெரிய மாநிலக் கட்சிகள் இல்லை, இந்தத் தேர்தலுக்கு முன் புதிதாக முளைத்துள்ள இரண்டு கட்சிகளைத் தவிர்த்து. இங்கு அந்தத் தேவையும் ஏற்பட வில்லை என்றே தோன்றுகிறது. தேசியக் கட்சிகளாக இருந்தாலும் மாநிலத்திற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது, அவை மாநிலக் கட்சிகளாகவே செயல்படுகின்றன.

இப்போது தோன்றிய இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது சொந்த விருப்பு வெறுப்பிற்காகவே பி.ஜே.பி.யிலிருந்து பிரிந்தனவே ஒழிய மாநில நலனிற்கு பங்கம் என்பதற்காக அல்ல.

காங்கிரஸ் இந்த முறை ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கேட்கிற  வரையில் ஆளும் பி.ஜே.பி.-க்கு எதிரான அலை வீசுவதாகவே தெரிகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள், பேரவையிலேயே பி.ஜே.பி அமைச்சர்கள் (!) வீடியோ பார்த்து மாட்டிக் கொண்டது, ஐந்து வருடத்தில் மூன்று முதல்வர்கள் என காங்கிரஸ் மேல் சொல்லப்படும் குற்றங்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று  நிரூபித்திருக்கிறார்கள்.

இதனால் முதல் முறை தனித்துப் பதவியேற்ற பி.ஜே.பி-க்கும், பல முறை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று மக்கள் உணருகிறார்கள்.

இதைத் தவிர பி.ஜே.பி-யிலிருந்து பிரிந்து இரண்டு கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. லிங்கயாத்துகளின் முக்கிய தலைவரான எட்டியூரப்பாவின் புதியக் கட்சி பி.ஜே.பி-யின் லிங்காயத்து ஓட்டுகளுக்கு வேட்டு வைக்கலாம். முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும்  லிங்காயத்து சமூகத்தைச் சார்ந்தவர் தான் என்றாலும் லிங்காயத்து ஓட்டுகளைத் தக்க வைக்க முடியுமா என்றுத் தெரியவில்லை. எட்டியூரப்பா கட்சி பெறும் ஒவ்வொரு ஓட்டும் அந்தந்த தொகுதியில் காங்கிரசையோ அல்லது ஜனதா தள்-கட்சியோ வெற்றிக் கோட்டைத் தொட ஏது செய்யும்.

ரெட்டி சகோதரர்கள் பின்புலமுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் வட கர்நாடக பகுதியில் பி.ஜே.பி-யின் தோல்விக்கு துணை போகலாம். கட்சித்  தொடங்கியவுடன் பி.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஸ்ரீராமுலு பி.ஜே.பி. மூலம் தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜினமா செய்து விட்டு நடந்த தேர்தலில் மீண்டும் பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பலத்தை ஏற்கனவே  நிரூபித்துள்ளார்.

ஆனால் இவையெல்லாம் ஓட்டுகளாக மாறி காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா? இல்லை கிங் மேக்கராக துடிக்கும் குமாரசாமியின் கனவை நினைவாக்குமா?

கொசுறு:

கர்நாடக தேர்தல் பற்றி எழுதி விட்டு தமிழர்கள் பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி?

அறுபது தொகுதிகளில் தமிழர்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி. தேசியக் கட்சிகள் இரண்டும் தமிழர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஜனதா தள் மற்றும் கே.ஜே.பி சில இடங்களை ஒதுக்கியுள்ளது. கோலாரில் ஜனதா தள் சார்பில் போட்டியிடும் தமிழரான முன்னாள் சட்டசபை உறுப்பினர்  பக்தவத்சலம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே அ.இ.அ.தி.மு.க.-விலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர அ.இ.அ.தி.மு.க-வும் 5 இடங்களில் போட்டியிடுகிறது.