அமிழ்து



கர்நாடகத் தேர்தல் - 2013

Sunday, May 05, 2013


இன்று கர்நாடகத் தேர்தல். தமிழ் நாடு போலல்லாமல் இங்கு எந்தக் கூட்டணியும் இல்லை.

பி.ஜே.பி., காங்கிரஸ் என இரு தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சியாகிப் போன ஜனதா தள் (மதச்சார்பற்றது), எட்டியூரப்பா கட்சியான  கே.ஜே.பி, ரெட்டி சகோதரர்கள் பின்புலமுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என எல்லோருமே கிட்டத்தட்ட 224 தொகுதிகளிலும் தனித்தனியாகத் தான் போட்டியிடுகிறார்கள்.

கம்யுனிஸ்டுகளுக்கு இங்கு பலம் இல்லை. தமிழகம் போல் சாதிக் கட்சிகளுக்கும் அதிக செல்வாக்கில்லை. காரணம், பலம் பொருந்திய லிங்காயத்துகளும், வொக்கலிக்காகளும் இரண்டு தேசியக் கட்சிகளிலும் இருக்கின்றனர். மான்டியா பகுதிகளில் வாழும் கௌடாக்களை ஜனதா தள் (மதச்சார்பற்றது) கவருகிறது.

ஜனதா தள்  (மதச்சார்பற்றது) தவிர்த்து இங்கு பெரிய மாநிலக் கட்சிகள் இல்லை, இந்தத் தேர்தலுக்கு முன் புதிதாக முளைத்துள்ள இரண்டு கட்சிகளைத் தவிர்த்து. இங்கு அந்தத் தேவையும் ஏற்பட வில்லை என்றே தோன்றுகிறது. தேசியக் கட்சிகளாக இருந்தாலும் மாநிலத்திற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது, அவை மாநிலக் கட்சிகளாகவே செயல்படுகின்றன.

இப்போது தோன்றிய இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது சொந்த விருப்பு வெறுப்பிற்காகவே பி.ஜே.பி.யிலிருந்து பிரிந்தனவே ஒழிய மாநில நலனிற்கு பங்கம் என்பதற்காக அல்ல.

காங்கிரஸ் இந்த முறை ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கேட்கிற  வரையில் ஆளும் பி.ஜே.பி.-க்கு எதிரான அலை வீசுவதாகவே தெரிகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள், பேரவையிலேயே பி.ஜே.பி அமைச்சர்கள் (!) வீடியோ பார்த்து மாட்டிக் கொண்டது, ஐந்து வருடத்தில் மூன்று முதல்வர்கள் என காங்கிரஸ் மேல் சொல்லப்படும் குற்றங்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று  நிரூபித்திருக்கிறார்கள்.

இதனால் முதல் முறை தனித்துப் பதவியேற்ற பி.ஜே.பி-க்கும், பல முறை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று மக்கள் உணருகிறார்கள்.

இதைத் தவிர பி.ஜே.பி-யிலிருந்து பிரிந்து இரண்டு கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. லிங்கயாத்துகளின் முக்கிய தலைவரான எட்டியூரப்பாவின் புதியக் கட்சி பி.ஜே.பி-யின் லிங்காயத்து ஓட்டுகளுக்கு வேட்டு வைக்கலாம். முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும்  லிங்காயத்து சமூகத்தைச் சார்ந்தவர் தான் என்றாலும் லிங்காயத்து ஓட்டுகளைத் தக்க வைக்க முடியுமா என்றுத் தெரியவில்லை. எட்டியூரப்பா கட்சி பெறும் ஒவ்வொரு ஓட்டும் அந்தந்த தொகுதியில் காங்கிரசையோ அல்லது ஜனதா தள்-கட்சியோ வெற்றிக் கோட்டைத் தொட ஏது செய்யும்.

ரெட்டி சகோதரர்கள் பின்புலமுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் வட கர்நாடக பகுதியில் பி.ஜே.பி-யின் தோல்விக்கு துணை போகலாம். கட்சித்  தொடங்கியவுடன் பி.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஸ்ரீராமுலு பி.ஜே.பி. மூலம் தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜினமா செய்து விட்டு நடந்த தேர்தலில் மீண்டும் பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பலத்தை ஏற்கனவே  நிரூபித்துள்ளார்.

ஆனால் இவையெல்லாம் ஓட்டுகளாக மாறி காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா? இல்லை கிங் மேக்கராக துடிக்கும் குமாரசாமியின் கனவை நினைவாக்குமா?

கொசுறு:

கர்நாடக தேர்தல் பற்றி எழுதி விட்டு தமிழர்கள் பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி?

அறுபது தொகுதிகளில் தமிழர்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி. தேசியக் கட்சிகள் இரண்டும் தமிழர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஜனதா தள் மற்றும் கே.ஜே.பி சில இடங்களை ஒதுக்கியுள்ளது. கோலாரில் ஜனதா தள் சார்பில் போட்டியிடும் தமிழரான முன்னாள் சட்டசபை உறுப்பினர்  பக்தவத்சலம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே அ.இ.அ.தி.மு.க.-விலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர அ.இ.அ.தி.மு.க-வும் 5 இடங்களில் போட்டியிடுகிறது.

படித்தது - புத்தகம் - "சயாம் மரண ரயில்" - சண்முகம்

Tuesday, December 25, 2012



 
"தமிழோசை" பதிப்பகம்; ரூ. 150/-
2007-ல் முதல் பதிப்பு; 2010-ல் இரண்டாம் பதிப்பு;

"தமிழோசை" பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம், இரண்டாம் உலகப் போர் தருணத்தில் (1942-1943) பர்மாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான, கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தூரமான இருப்புப் பாதையை அமைப்பதில் தமிழர்களின் பங்குபற்றிய சோக வரலாற்றை நாவல் வடிவத்தில் பதிவு செய்துள்ளது.

ஆசிரியர் இவ்வேலையில் பங்காற்றிய பலரைச் சந்தித்து அவர்களது அனுபவத்தைத் தொகுத்து வரலாற்றுக் குறிப்பாக கொடுக்காமல் நாவலாக கதை மாந்தர்கள் வழியாக வழங்கியுள்ளார்.

மலேய, சிங்கப்பூர் மற்றும் பர்மீய தமிழர்கள் (பிரிட்டிஷார், ஆஸ்திரிலேயர் மற்றும் டச்சு  போர்க் கைதிகளும் இவ்வேலைக்குப் பயன்படுத்தப்பட்டனர் ) எப்படி ஜப்பானிய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு தங்கள் உடல், பொருள், உறவுகள், மனநலம் என சகலத்தையும் இழந்தனர் என்பதை பல கதை நாயகர்கள் வேலு, மாயா, கந்தசாமி, நாகப்பன் போன்றோர் வாயிலாக ஆசிரியர் விளக்குகிறார். இதனூடாக ஒரு தமிழ்-சயாம் இனக் காதலர்களையும் காட்டியுள்ளார் ஆசிரியர்.

நாவல் வடிவத்தில் இருந்தாலும், ஆங்காங்கே கதைக்கு நடுவே தேவையான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர்.


நூலிலிருந்து சில தகவல்கள்:

> ஜப்பான் எப்படியாவது இந்தியாவையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றே இந்த ரயில் பாதையை அமைக்க முயற்சித்துள்ளனர்.  அதற்கு பயன்படுத்தியது இந்திய வம்சாவளித் தமிழர்களை;

> கிட்டத்தட்ட 400 கி.மீ. பாதை பெருங்காடுகளையும், காட்டாறுகளையும், கணவாய்களையும், குன்றுகளைக் குடைந்தும் போடும் இந்தப் பணியில் எளிய கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது;

> போரின் நெருக்கடி காராணமாக 16 மாத கால அவகாசத்தில் 400 கி.மீ. இரயில் பாதை அமைக்கப் பட வேண்டியிருந்தது; ஜப்பானியர்கள் இந்த வேலையில் ஈடுபட்டவர்கள் யாரையும் மனிதர்களாகவே மதிக்கவில்லை; தவறுக்குத் தண்டனைகளாகவும், நோயுற்றவர்களுக்கு மருந்தாகவும் மரணமே தரப்பட்டுள்ளது ஜப்பானியர்களால்;

> கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் இந்தப் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; ஆனால் திரும்பியதோ சொற்ப ஆயிரங்களே;

> ஆங்கிலேயர்கள் துரைகளாக  கோலோச்சிய காலனி ஆதிக்கக்  கால  கட்டத்தில் அவர்கள் போர்க் கைதிகளாக சரியான உடை, உறைவிடம் மற்றும் உணவுமில்லாமல் கடுமையான உடல் உழைப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்; ஒரு பாக்கேட் சிகரெட்டுக்குக் கூட தமிழர்களிடம் கையேந்தியுள்ளனர்;

> நேதாஜி இந்தியாவிற்கு பிரிட்டனிடமிருந்து விடுதலை வாங்கிவிட வேண்டும் என ஜப்பானுடன் நட்பு பாராட்டினார் என்பது வரலாறு; ஆனால் ஜப்பான் நினைத்தப்படி இரயில் பாதை அமைத்து இந்தியா வந்து பிரிட்டனைத் தோற்கடித்திருந்தால், நமக்கு விடுதலைக் கிடைத்திருக்குமா இல்லை ஜப்பானிடம் கைமாறியிருக்குமா என்று தெரியவில்லை ?

> அமெரிக்க அணு குண்டெறிந்த அந்த நாளிலேயே இக்கொடுமையிலிருந்து தமிழர்களுக்கு விடுதலைக் கிடைத்துள்ளது;


மொத்தத்தில் சோகம், காதல், வீரம், கொடை, செண்டிமெண்ட், தமிழ்ப் பெருமை என தமிழ்ப் படத்திற்கு தேவையான அனைத்தும் உள்ளது இந்த உண்மை கலந்த நாவலில். இந்த நூல், இயக்குனர் முருகதாஸ் போன்றவர்களின் கண்ணில் இன்னும் படவில்லை போலும் ...

இந்த சோக வரலாற்றை சில ஆயிரம் மக்களே பங்காற்றிய மற்ற நாட்டினர் நூலாகவோ(Return from the River Kwai, The Japanese Thrust – Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial, The Forgotten Highlander – My incredible story of survival during the war in the Far East. London, UK:), திரைப்படமாகவோ (The Bridge on the River Kwai), பதிவு செய்திருக்கும் வேளையில், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் தமிழர்கள் (புத்தகத்தில் குறிப்பிட்டப்படி) பங்குபற்றிய இப்பெரு நிகழ்வை
இன்னும் பலருக்குத் தெரியவில்லை என்பது, நாம் ஆவணப்படுத்தலில் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளோம் என்பதையே காண்பிப்பதாய் உள்ளது.

சில இடுகைகள்: http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm; http://en.wikipedia.org/wiki/Burma_Railway

ஒரு கொசுறு செய்தி: இலங்கையில் The Bridge on the River Kwai படமாக்கப்பட்ட சமயத்தில் படப்பிடிப்பைப் பார்க்க நேர்ந்த திரு.பாலு மகேந்திரா, சினிமாவால் கவரப்பட்டு அதனாலேயே தான் சினிமா துறைக்கு வந்தாராம்.

Labels:

வீட்டிற்கு வந்த டையனோசர்...!

Saturday, October 27, 2012




புதியதாக வாங்கிய தொலைக்காட்சியைப் பொருத்துவதற்காக அந்த கம்பெனியிலிருந்து ஒரு டெக்னீஷியன் வரவேண்டும். வாங்கிய மூன்றாம் நாள் அதாவது ஒரு செவ்வாய்க்கிழமை மாலை ஆறரை மணிக்கு, நான் எனது வீட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எனது அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு பேச ஆரம்பித்தேன்.

அவர் தனது பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். "டையனோசர்" என்பது போல் எனது காதில் விழுந்தது. போக்குவரத்து இரைச்சல் சற்றே அதிகமாக இருந்ததால் நமது காதில் தான் ஏதோ சரியாக சேரவில்லை என்று நினைத்துக்கொண்டு, பேரா முக்கியம்... இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறேன்.. உடனே  வீட்டிற்கு வர இயலாது. நீங்கள் நாளை வாருங்கள் என்றேன். வழக்கம் போல் நாளை எனபது வந்தால் தான் நிச்சயமாக இருக்க... மாற்றி மாற்றி அவரை (டையனோசரை (!) ) அழைத்து சனிக்கிழமை மதியம் என்று பிக்ஸ் செய்தேன்.

இதற்கிடையில், எனக்கு பெருத்த சந்தேகம்... ஒரு மனிதனுக்கு விலங்கு பெயரை வைப்பார்களா? இருக்கலாம்... எனக்கு தெரிந்த ஒரு பையனுக்குக் கூட "காளை" என்று பெயரிருந்தது... கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத அந்த ஊரில் என்னுடைய பால்ய காலத்தில் இருந்த போது, எங்களைப் போன்ற சிறார்களுக்கு அவன், பெயரைப் போலவே முரட்டுக் காளையாகவே தெரிந்தான்.

சமீபத்தில் கூட சிவக்குமார் புதல்வர்கள் சிங்கம், சிறுத்தை என்றப் பெயர்களில் புழங்கி படங்கள் வெளி வந்தனவே. ஆண்களுக்கு மட்டுமா விலங்குகள் பெயர்கள் வைக்கிறார்கள்? பெண்களுக்கும் கூட மயிலு, குயிலு, சிட்டு என்று பெயர்கள் வைத்து பறவைகள் போல கூவவும் விடுகிறார்கள்...

இந்த பெயர்களெல்லாம் கூட பரவாயில்லை. நாம் வாழும் காலத்தில், அவ்விலங்குகளின் குணாம்சத்தால் கவரப்பட்டோ அல்லது வேறு பல காரணங்களாலோ அவர்களது பெற்றோர்கள் வைத்திருக்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக நம்பப்படும் டையனோசரால் ஒரு தகப்பனோ, ஒரு குடும்பமோ கவரப்பட்டு அப்பெயரை தனது அடுத்த தலைமுறைக்கு வைக்குமா?

ஒரு வேளை இவர் அரியலூர் பகுதியைச் சேர்ந்தவரா? எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் அரியலூரில் மட்டும் தான் டையனோசர் சுவடுகள் கண்டிப்பிடித்ததாக நினைவு. இவரது மூதாதையர்கள் யாரும் டையனோசரை செல்லப் பிராணியாக தங்களது வீட்டில் வளர்த்திருக்கலாம். ஏதோ ஒரு சந்தர்பத்தில் தனது உயிரை விட்டு, அந்த டையனோசர் இவர்களது குடும்பத்துக்கு உதவியிருக்கலாம். அதன் நினைவாக, வழி வழியாக தனது வம்சத்தில் ஒருவருக்கு டையனோசர் என்று பெயர் வைக்க வேண்டும் என்பது மரபாயிருக்கலாம்...? ;)

டையனோசர் என்பது கூட தொண்ணூறுகளின் மத்தியில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படத்தின் மூலமே சாமானிய மக்களுக்கிடையிலும் பிரபல்யம் அடைந்தது. வரும் இந்த டெக்னிசியன் தொண்ணூறுகளின் மத்தியில் பிறந்திருப்பதற்கும் வாய்ப்பு சற்று கம்மியாக இருக்கிறது. அல்லது தமிழ்நாட்டில் நடிகர்களின் தீவிர விசிறிகள் தங்களது பெயர்களை ரஜினி சிவா, கமல் குமார் என்று பெயர் வைத்துக் கொள்வார்களே அது போல இந்த டெக்னிசியனும் டையனோசரால் கவரப்பட்டு டையனோசர் என்று வைத்துக் கொண்டாரோ?!

டையனோசர் என்ற இவரது பெயரை அலுவலகத்திலும், வீட்டிலும் முழுமையாகத் தான் கூப்பிடுவார்களா? "டை" அல்லது "டையன்" என்று கூப்பிடுவார்களா? "டை" என்று எப்படி சொல்ல முடியம்? இப்படியாக நான்கு நாட்களில் தொலைக்காட்சியைப் பொருத்துவதை விட "டையனோசர்" என்று பெயர் தாங்கி நிற்கும் இந்த மனிதனைப் பார்க்கும் ஆர்வமே அதிகமாகிவிட்டது.

சனிக்கிழமையும் வந்தது. எங்கே மறந்து விடுவாரோ என்று காலையிலேயே ஒரு முறை அழைத்து நினைவூட்டினேன். அப்போது கூட அவரது பெயரை வைத்து என்னால் உறுதியாக அழைக்க முடியவில்லை. இன்று கண்டிப்பாக வந்து விடுவேன் என்றார். டையனோசருக்காக காலையிலிருந்து காத்திருந்தேன்.

அவரிடமிருந்து தான் அழைப்பு வந்தது. "டையனோசர்"... எப்படி சார் வர்றது என்று வீட்டுக்கு பக்கத்தில் நான் சொன்ன "லேன்ட் மார்க்"-லிருந்து கேட்டார். நீங்கள் அங்கேயே இருங்கள் நான் வந்து பிக்-அப் செய்கிறேன் என்று சொல்லி அவர் நின்ற இடத்திற்கு சென்றேன்.

பரஸ்பர அறிமுகம்... இப்போது கூட "டையனோசர்" என்று சொல்லி கைக் குலுக்கினார். ஆள் நாற்பதுகளின் தொடக்கத்தில் தான் இருக்க வேண்டும் கண்டிப்பாக தொண்ணூறுகளின் மத்தியில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. குங்குமப் பொட்டு வேறு வைத்திருந்தார். பார்த்தால் சினிமாவின் பரம விசிறி டைப் என்றும் சொல்வதற்கில்லை.

இப்போது கூட பேரை வைத்து அழைக்காமல் நீங்க, வாங்க என்று சமாளித்து விட்டேன்.

எல்லாம் முடிந்து கிளம்ப தயாரானார். எனக்கு "டையனோசர்" பெயர் காரணம் தெரியவில்லை என்றால் அன்று தூக்கம் வருமா தெரியவில்லை...

தொலைக்காட்சியில் எந்த பிரச்சினை என்றாலும் என்னை அழையுங்கள். அதே நம்பர் தான் என்றார்.

இப்பொழுது கேட்டேன்... சாரி, உங்க பேர திரும்பி ஒரு முறை சொல்றீங்களா?

டையனோசர்...

என்னது...? என்றேன் நான் திரும்ப...

டையனோசர்...?!

இல்ல, கொஞ்சம் மெதுவா சொல்லுங்க.. 

தயானந்த் சார்...என்று சொல்லி அவர் கிளம்ப...

நான் மட்டும் தயானந்த் சார், தயானந்த் சார் என்று  திரும்பி திரும்பி சொல்லிப் பார்க்க "ந்த்" கழன்று தயானசார், தயானசார் என்றாகி சிறிது நேரத்தில் டையனோசர் என்று செட்டில் ஆனது...

உங்களுக்கு... ;) ? !

Labels: ,

Thursday, October 25, 2012
"தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்"



க்ரியா பதிப்பகம் 2004 -ல் மொழிப் பெயர்த்து
(தமிழில்: வெ. ஸ்ரீராம்) வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவரான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியர் பூர்தியு அவர்களின் "தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்" என்ற புத்தகத்தை க்ரியாவின் இணையதளத்தின் மூலம் ஒரு மாதம் முன்பு வாங்கினேன்.

நூற்று சொச்சப் பக்கங்களே இருந்தாலும் இந்தப் புத்தகத்தை இன்னும் முடிக்க முடியாமல் இருக்கிறேன். புத்தகத்தின் கருத்துச் செறிவு அப்படி. ஒரே பக்கத்தை ஒரு முறைக்கு பல முறை படிக்கிறேன். இது தொலைக்காட்சி என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ்ச் சூழலில் இது அச்சு ஊடகத்திற்கும் பொருந்துகிறது.

1996 ல் முதலாவதாக பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் பியர் பூர்தியு கூறியுள்ள கருத்துகள் தற்கால தமிழகத்தின் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது. அதைச் சற்றே இந்தக் காலத்து தமிழ் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கிறேன்.

பியர் பூர்தியுவின் சில கருத்துக்களும், தமிழ்ச் சுழலுக்குப் பொருத்திப் பார்த்தலும் ...

பியர் பூர்தியு: 
 
"கவலைப்படாமலேயே நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள ஒப்புக்கொள்வதன் மூலம் எதையும் சொல்வதற்காக அவர்கள் அங்கு இருக்கவில்லை என்பதையும், ஆனால் வேறு பல காரணங்களுக்காக, குறிப்பாக, தங்களைக் காண்பித்துக் கொள்ளவும் மற்றவர்களால் பார்க்கப்படுவதற்காகவும் தான்..." இருத்தல் என்பது மற்றவர்களால் பார்க்கப்படுவதுதன் என்று பெர்க்லி-யை மேற்கோள் காட்டுகிறார். தொலைக்காட்சித் திரை சுயமோகிக்கான ஒரு நார்சிசஸ் கண்ணாடியாக, சுயமோகத்தைக் கண்காட்சிப்படுத்துவதாக இன்று ஆகிவிட்டது.

தமிழ்ச் சூழல்:  
 
இதை நமது தமிழ் ஊடகங்களில் வரும் கருத்துச் சொல்லிகளைப் பொருத்திப் பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் திரும்பத் திரும்ப ஒருவர் தனது முகத்தைக் காட்ட பிரயத்தனம் செய்ய வேண்டியதில்லை... நீயா நானா போன்ற நிகழ்சிகளில் அழைக்கப்படும் பிரபல்யங்களைத் தவிர நன்றாகப் பேசும் கூட்டதிலிருப்போருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுகிறது. இவர்களால் எந்த ஒரு விடயத்துக்கும் நேரிடையாகவோ அல்லது எதிராகவோ பேச முடியும். இங்கு கொள்கை, கருத்து என்பதெற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை... முகங்காட்டுவதே முக்கியமாகிறது...

பியர் பூர்தியு: 
 
எல்லோருக்கும் முக்கியமானது போல் இருக்கும் விஷயங்கள் மீது கவனத்தைத் திருப்புவது. இவற்றை ஆம்னிபஸ்  தகவல்கள் என்று சொல்லலாம். இந்த தகவல்கள் யாரையும் திடுக்கிடவைக்காதவை; கட்சிப் பிரிக்காதவை; ஒப்புக் கொள்ளும் தன்மை கொண்டவை... துணுக்குச் செய்தி... தகவல் சரக்கு... நேரம் என்பது சொலைக்காட்சியில் மிகமிக அரிதாகக் கிடைக்கப்பெறும் சரக்கு. இவ்வளவு பயனற்ற விஷயங்களைச் சொல்வதற்கு இவ்வளவு பொன்னான நிமிடங்களைச் செலவிடுவது ஏனென்றால், பொன்னான சில விசயங்களை மறைக்கிற காரணத்தினாலேயே பயனற்ற இந்த விசயங்கள் மிகவும் முக்கியமானவையாகின்றன என்பதால் தான்.

தமிழ்ச் சூழல்:
 
தமிழகத்தில் மக்கள் அறிய வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, எந்த ஒரு செய்தி நேரத்திலும் "சைனாவின் வினோத மனிதன்" என்றோ மெக்சிக்கோவின் நாய்ச் சண்டைப் பற்றியோ முற்றும் முழுவதுமாக செய்தி நேரத்திற்கு சுவைச் சேர்க்கவோ இன்னப்பிற காரணங்களுக்காகவோ பொன்னான செய்தி நேரம் உபயோகப்படுத்தப்படுகிறது.

பியர் பூர்தியு: 
 
காட்டப்பட வேண்டியதே காட்டுவது போல் இருந்தாலும், அதைக் காட்டும் விதத்தில் அது காட்டப்படாமலேயே போய்விடுகிறது... அல்லது அந்தத் தகவல் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் எதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு அர்த்தம் அதற்குக் கற்பிக்கப்பட்டு விடுகிறது. 

தமிழ்ச் சூழல்:  
 
சமீபத்தில் தமிழக முதல்வர் அமைச்சர்களை மாற்றிக் கொண்டிருந்த வரிசையில் சபாநாயகரையும் மாற்றியது விவாதத்துக்கு உள்ளான pOthu தினமலர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி புதிதாக வரப் போகும் சபாநாயகரின் சாதியைப் பெரிது படுத்தி ஆளும் வர்க்கத்துக்கும் நல்ல பிள்ளையாகவும், படிப்பவர்களுக்கும் வேறு வித அர்த்தத்தைக் கற்பித்தது.


பியர் பூர்தியு:   துறைச் சார்ந்த அங்கீகாரம்
 
சிலருக்கு மக்களிடையே பிரபலமடைவதற்கு தொலைகாட்சி ஊடகங்கள் உதவி செய்து அதன் மூலம் எழுத்தாளர்களாகவோ, பாடகர்களாகவோ, நாட்டியக்காரர்களாகவோ அங்கீகாரம் அளிப்பதன் மூலம் காலம் காலமாக இந்தத் துறை சார்ந்த அங்கீகாரம் அளிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் தொலைக்காட்சி போட்டியில் இறங்குகிறது. இதனால் அங்கீகாரம் பெறத் தேவையான தகுதிகள் என்ன என்பதில் குழப்பம் ஏற்படுகிறது...

தமிழ்ச் சூழல்:  
 
தமிழ்ச் சூழலில் பல்வேறு தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற பேச்சாளர்கள், இசை மற்றும் நாடிய போட்டிகளில் வரும் நடுவர்கள்...

பியர் பூர்தியு:  மிகைப்படுத்துதல்
 
சாதாரண சொற்களைக் கொண்டு நகர்புற நடுத்தர வர்க்கத்தையோ, பாமர மக்களையோ வாய்ப் பிளக்க வைக்கமுடியாது. அதற்கு அசாதாரணமான சொற்களைப் பயன் படுத்த வேண்டும்.

தமிழ்ச் சூழல்:  
 
தமிழ்ச் சூழலில் செய்திகளில் உபயோகிக்கப்படும் "இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது" போன்ற பிரயோகங்கள்.

பியர் பூர்தியு: 
 
பரபரப்பை நம்பியிருக்கும் பத்திரிக்கைகளின் பிரதான மேய்ச்சல் நிலமான துணுக்குச் செய்திகளும் இரத்தமும் பாலியலும் திடுக்கிடும் நிகழ்வுகளும் குற்றங்களும் எப்போதுமே நன்றாக விலை போயிருக்கின்றன. 

தமிழ்ச் சூழல்
 
இரவு பத்து மணிக்கு மேல் வரும் குற்றம் நடந்தது என்ன, போலிஸ் டைரி போன்ற நிகழ்ச்சிகளும் வருணனையாளர் அதை விவரிக்கும் அமானுஷ்ய என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களும்...

இதை பகுதி ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம், மீதிப் பக்கங்களையும் படித்து விட்டு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

Labels: , ,

பிரேக்காந்தர ஒந்து இதே, கொத்தா?

Friday, June 08, 2012
)


அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி வந்து கொண்டிருந்தேன். குறுகிய சாலை தான் என்றாலும் பேருந்து போன்றவை செல்லும் வகையில் தான் அது இருக்கும். எனக்கு முன்னர் ஒரு ஆட்டோ ஒன்று மித வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் நான் மித என்றால் மித அப்படி ஒரு மித வேகத்தில் சென்று கொண்டிருந்தேன்.

எனது இந்த மித மித வேகத்துக்குக் காரணம், பள்ளிப் பிராயத்திலிருந்து "மித வேகம், மிக நன்று" என்று நான் தமிழக அரசுப் பேருந்துகளில் பலமுறை படித்துப் படித்து மனதில் ஊறியதால் என்று நீங்கள் தப்பாக எண்ண வேண்டும். இதற்கு காரணம் நமது இருசக்கர வாகனமே.

பாவம் அதுவும் என்ன செய்யும். அதையும் கவனித்தால் தானே. பெட்ரோல் போடுவதும், எப்போதாவது இரு சக்கரங்களுக்கும் காற்று அடிப்பதையுமே பெரிய கவனிப்பு என்று  நினைக்கும் என்னைப் போன்ற எஜமானனிடம், பெட்ரோல் போட்டால் ஓடுவதே அது செய்யும் பெரிய தியாகம் தான்.

வண்டியின் சீட்டு மட்டும், நான் தவறாமல் உட்காருவதால் கொஞ்சம் அழுக்கில்லாமல் இருக்கும். மற்றபடி வண்டியின் ஹாரனைத் தவிர மற்ற ஆயிரத்தெட்டு பாகங்களும், தாமும் வண்டியின் ஒரு பாகம் தான் என்று எனது கவனத்தைப் பெற துடித்து எழுப்பும் ஒலிகள் எனக்கு கேட்கிறதோ இல்லையோ, பக்கத்தில் வரும் நமது சக ஓட்டுனர்களின் காதுகளை ஈர்த்து என்னை ஏற இறங்கப் பார்க்கச் செய்யும்.

இப்படி தான் ஒரு நாள் எனது பக்கத்து வீட்டுக்காரர் என்னை அழைத்து "ஏன்றி மனைக்கே ஸ்வல்ப முந்தே பரனல்வா" (ஏங்க, வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரம் முன்னாடியே வரலாம்ல?) என்று கேட்டார். எனக்கோ மொழித் தெரியாத ஊரில் நம்மீது ஒரு வயதான ஜீவன் அக்கறையுடன் வீட்டுக்கு சீக்கிரம் வரச் சொல்கிறதே என்று மெய்சிலிர்த்து நின்றிருந்த நிலையில் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார் கன்னடத்தில். "வயசான காலத்துல தூங்க விடுறாங்களா, நேரங்கெட்ட நேரத்துல வீட்டுக்கு வந்து நம்ப தூக்கத்த கெடுக்கிறானுங்க" என்று சொல்லிக் கொண்டே சென்ற போது தான் நமது "வண்டிச் சத்தம்" அண்டை அயலாரையும் அடைந்தது தெரிந்தது.


பிரேக்கைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சில சமயங்களில் எனக்கே நான் மிதிப்பது பிரேக் லிவர் தானா என்று சந்தேகம் வரும் வகையில் கீழே எனது காலுக்கும் அந்த பிரேக் கட்டைக்கும் நடக்கும் போராட்டத்தைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் மேலே எனது பைக் போய்க் கொண்டிருக்கும். 

பின்பு சில பல சாகசங்களைச் செய்து தான் நிறுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக ஸ்பீடு பிரேக்கர்களில் பிரேக் லிவர் ஸ்பீட் பிரேக்கரைத் தொடும் அளவுக்கு மிதித்தால் கூட எந்த வித ரெஸ்பான்சும் இல்லாமல் எதுவுமே நடவாதது போல் அசால்டாக செல்லும் எனது பைக்கின் மீது அப்பொழுது தான் கோபம் பொத்துக் கொண்டு வரும். இருந்தாலும் அதுவும் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனைச் செய்கிறது என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்.

சரி மீண்டும் சாலைக்கு வருவோம்...

இப்படியாக ஆட்டோவைப் பின் தொடர, ஒரு திருப்பத்தில் ஆட்டோ சடன் பிரேக் போட, மித வேகத்தில் சென்றாலும் மேலே சொன்னதைப் போல, இந்தப் பேரதிர்வைத் தாங்கக் கூடிய அளவுக்கு நமது வண்டியில் சக்தி இல்லாததால், அந்த KA ரிஜிஸ்ரேஷன் ஆட்டோவில், இந்த TN வண்டி பின்னாடி முத்தமிட்டு நிற்க,

இந்த அதிர்வை உணர்ந்த ஆட்டோ டிரைவர் கேட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த கேள்வி தான்

"பிரேக்காந்தர  ஒந்து இதே, கொத்தா?" (ப்ரேக்குன்னு ஒண்ணு இருக்கு, தெரியுமா?

நமது பதில் இதை விட ரொம்ப சிம்பிள் தான்....

"பிரேக்காந்தர  ஒந்து இதே அந்த, கொத்து! ஆதரே இ பைக்கி-நல்லி பிரேக்காந்தர ஒந்து இல்லாந்த நிமகே கொத்தா?" (ப்ரேக்குன்னு ஒண்ணு இருக்கறது தெரியும்... ஆனா இந்த பைக்குல ப்ரேக்குங்ரா ஒண்ணு இல்லைன்னு உங்களுக்கு தெரியுமா?)

எதிர் கேள்வியை எதிர் பார்க்காத அந்த ஆட்டோ டிரைவர், மேலே எதுவும் கேட்காமல் பறந்து விட்டார். ஆனால் எனக்கு மட்டும் ஒன்று புரியவில்லை.

எனது பதிலுக்குப் பிறகு ஒன்றுமே கேட்காமல் அவர் விரைந்தது,

நான் வேறு எதையாவது மேலும் கன்னடத்தில் பேசி விடுவேனோ என்ற பயமா அல்லது நான் சொன்ன பதிலாலா என்று இன்று வரைத் தெரியவில்லை, எனக்கு.

உங்களுக்கு...!?

"பேஸ்புக் போராளி" (அல்லது) வடை போகல (அல்லது) தட்டிக் கேட்டால் வடை கிடைக்கும்!

Friday, May 25, 2012
வடை போகல (அல்லது) தட்டிக் கேட்டால் வடை கிடைக்கும்!



இன்று இரவு உணவு எங்கே சாப்பிடலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே சாந்தி, ஸ்ரீநிதி, அடிகாஸ் என்று சாகர்களிலேயே பல நாட்களாக சாப்பிட்ட எனது நாக்கு, வெகுண்டெழுந்து வர மாட்டேன் என மக்கர் செய்ய...
திறந்து பல நாட்களாகியும் நமது கால் தடம் படாத கம்மனஹல்லி அடையார் ஆனந்த பவனுக்குச் சென்று விடுவது என்று முடிவு செய்தேன்.

வழக்கம் போல என்ன சாப்பிடுவது என்றுத் தெரியாமல் "மெனு" கார்டைப் பார்த்து முறைக்க, அது என்னை முறைக்க, இதற்கிடையில் அந்த "மெனு" கார்டை கைப்பற்ற இன்னொருவர் துடிக்க, சரி எதற்கு வம்பென டக்கென்று கண்ணில் பட்ட "மினி டிபன்" என்றுவிட்டேன். மினி டிபன் என்பது இட்லி, வடை, கேசரி, பொங்கல், மினி மசாலா தோசை ஆகியவற்றை  உள்ளடக்கியது. சுளையாக அறுபது ரூபாயைக் கொடுத்து விட்டு துண்டுச் சீட்டை வாங்கினேன்.

கர்மசிரத்தையாக இன்னொரு வரிசையில் நின்று அந்த சீட்டுக்கு 48 என்ற நம்பரும் எழுதி வாங்கிக் கொண்டேன் அவர்களது ப்ராசெஸ் படி. இது வரை எல்லாம் சுகமே.

இதற்கிடையில் என்னைப் போன்று "மினி டிபன்" சொல்லிவிட்டுக் காத்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்தத் தட்டுடன் அதிர்ச்சியும் சேர்ந்து வந்தது... மினி வடை தீர்ந்து விட்டதால் அதற்கு பதிலாக "கார பாத்" வைத்திருந்தார்கள். சிலருக்கு கார பாத் பிடித்திருந்தது போல, சத்தமில்லாமல் வாங்கிச் சென்று விட்டார்கள். சிலர் அங்கே இருந்த பெரிய வடையைச் சுட்டிக்காட்டிக் கேட்க, இது ரெகுலர் வடை, மினிக்கு மினி வடை தான் என்றார்கள்.

அடுத்த மினியை வெளியே அனுப்பவதற்கான முஸ்தீபுகளில் இறங்க ஆரம்பித்தார் சப்ளையர். எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு மினி மாசலுக்காக காத்திருந்தது அந்தத் தட்டு. சுற்றிலும் யாரும் இல்லாததால் அந்த மினி எனக்கே எனக்கானது என்று நானும் மசாலை எதிர்பார்த்து சமையலறை வாசலில் எனது பார்வையை நிலைக் குத்தியிருந்தேன்.

இப்பொழுது இன்னொருவரும் மினிக்கான டோக்கனை கொண்டு வந்துக் கொடுக்க அவரது நம்பர் 51 என்றானது. மினி டிபனுக்கு இப்போது போட்டி உருவானது. எதெற்கெல்லாமோ மனசாட்சி என்பார்கள்... ஆனால், இப்போது எனது மனசாட்சி முதலில் வரும் மினி டிபன் உனக்குக் கிடைக்காது என்றுக் கொக்கரித்தது. நானோ, "நான்" எப்படியும் வாங்கி விடுவேன் என்று அதனிடம் சவால் விட்டேன்.

51 -ம் நம்பர்காருக்கு இட்லி பிடிக்காது போலும்...அதற்கு பதிலாக முன்பு பலரும் கேட்டுத் தோற்றுப் போன அந்த வடைக் கிடைக்குமா என்று கேட்டார். சப்ளையர் சற்றே நக்கலாக இட்லிக்கு வடை மாற்றா என்று பட்டிமன்றத் தலைப்பைப் போலக் கேள்விக் கேட்டுவிட்டு 51 -ன் முகத்தைப் பார்த்தார்.

51, இப்போது சலிக்காமல் கடையிலிருந்த பலவற்றையும் கேட்டுப் பார்த்தது. கடைசியில் சப்ளையரே சலித்துப் போய் ஒரு கரண்டி வெஜ் பிரியாணியை வைத்து விட்டு, 51 -ன் இட்லி எதிர்ப்புக்கு சற்றே முற்றுப் புள்ளி வைத்தார்.

இவரது கான்பிகரேஷன் வித்தியாசமாக இருந்ததால் அடுத்த மினி எனக்குக் கிடப்பதில் சிக்கல் இல்லை என்று இறுமாந்திருந்தேன்.

இப்பொழுது இரண்டு மினி தோசைகள் வந்தது... நல்லது, எந்தப் போட்டியும் இல்லை. முதலில் 51 -க்கு வைத்தால் கூட உடனடியாக நமக்கும் கிடைத்துவிடும் என்பதாலும் எனது "நானுக்கும்" மீசையில் மண் ஒட்டப் போவதில்லை என்பதாலும் சிறிது மகிழ்ந்திருந்தேன்.51 -க்கு தோசையையும் வைத்து அனுப்பி விட்டார்கள்.

ஆனால் கண நேரத்தில் எங்கிருந்தோ வந்த சிறுவன் 49 என்று சொல்ல, சப்ளையரும் தோசையின் மேலிருந்த துண்டுச்சீட்டை சரிப் பார்த்து அந்த மினியை 49 -க்குக் கொடுக்க ... நான் ஒரு பத்து நிமிடமாகப் பார்த்துப் பார்த்து வைத்திருந்தது  இப்பொழுது ஒரு சிறுவனின் வயிற்றினுள்  ஐக்கியமாவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உள்ளே மனசாட்சி வேறு சலங்கை கட்டிக் கொக்கரிக்க... எனக்குள்ளிருந்த "பேஸ்புக் போராளி" உயிர்த்தெழ ...நியாயத்தைத் தட்டிக் கேட்க ஆரம்பித்தேன்.

உங்கள் ஊரில் 48 யை விட 49 -உம், 51 -உம் தான் சிறிய எண்களா?
நீங்கள் எழுதித் தந்த டோக்கனை நீங்களே மதிக்கவில்லையே என்று சில அறிவு, உணர்வு மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல கேள்விகளை சரமாரியாக கேட்க, அங்கிருந்த மேலாளர் ஒரு ரெண்டு நிமிடம் சார், வந்து விடும் என்றார்.

ஆங்கிலத்தில் சொல்லுவது போல் லிட்டரலாக அங்கிருந்த மேசையின் மேல் தட்டிக் கேட்டு எனது வாதத்தினை முடித்தேன்.

இப்பொழுது எனது மனசாட்சியும் இல்லை, "நானும்" தன்னிடத்தை "வெக்கேட்" செய்திருந்தது. எனக்கு இப்போது போட்டியாளர்களும் யாருமில்லை.

மேலாளரே இப்போது தட்டில் எல்லாவற்றையும் அடுக்கினார். ஆச்சரியமாக, பலருக்கு மறுக்கப்பட்ட அந்த வடை எனது தட்டை வந்து தஞ்சம் அடைந்தது.

மேலாளர் அந்த வடையைப் போட்டு எனது வாயை அடைக்க முனைந்தாரா தெரியவில்லை!

ஆனால்  ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் ஆகிறது.

"தட்டிக் கேட்டால் நீதிக் கிடைக்கிறதோ இல்லையோ, வடை கிடைக்கிறது! " - வடை போகல!










எனது புத்தக வாசிப்பு அனுபவம் - உறங்கா நகரம் - வெ. நீலகண்டன்

Sunday, October 23, 2011

இந்த முறை உடுமலை.காம் வழியாக வாங்கிய புத்தகங்களில் வெ.நீலகண்டன் எழுதிய உறங்கா நகரம், ஊர்க்கதைகள் ஆகிய புத்தகங்களும் அடங்கும். இரண்டுமே குங்குமம் இதழில் தொடராக வந்தவை என்பது புத்தகங்கள் கையில் கிடைத்தவுடன் தான் தெரிந்தது.

இணையத்தில் வாங்கும் போது, பல தடவை புத்தங்களின் தலைப்பை வைத்தே வாங்கிவிடுவேன். இந்த முறையும் அப்படித்தான். இது ஒரு வகையில் எனக்கு நல்லது தான். சில புத்தங்களை நேரில் பார்க்கும் போது வாங்கத் தோணுவதில்லை. அதனாலே பல நல்ல புத்தங்களை நான் தவற விட்டிருக்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால், இவ்விருப் புத்தங்களையும் கூட நான் தவற விட்டிருப்பேன். நல்ல வேளையாக இணையத்திலேயே வாங்கிவிட்டேன்.

சந்தியா புத்தகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டிருக்கின்ற இவ்விருப் புத்தகங்களையும் எழுதிய வெ. நீலகண்டன் அவர்கள் குங்குமம் வார இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார்.

உறங்கா நகரத்தை வந்த ஓரிரு நாளில் படித்து முடித்துவிட்டேன். இப்பொழுது ஊர்க்கதைகளை ஆரம்பித்திருக்கிறேன்.


சென்னை நகரை எனக்கு எப்போதும் பிடிக்கும். அதற்கு காரணம் பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இறங்கியதுமே தொற்றிக் கொள்ளும் பரபரப்பு. இதற்கு அதிகாலையும் விதி விலக்கல்ல. பூங்கா நிலையத்தில் உள்ளூர் இரயில் வண்டி ஏற வருவதற்குள் அந்த அதிகாலையிலே பிச்சைக்காரர் முதல் பேப்பர் போடுபவர், டீக்கடைகாரர், பிளாட்பாரம் கடைக்காரர் என அனைவருமே வியாபாரத்தை ஆரம்பிப்பதுதான். உண்மையிலே அது உறங்கா நகரம் தான்.

இதை நான் சேலத்து பேருந்து நிலையத்திலும் கண்டிருக்கிறேன். அர்த்த இராத்திரி 12 மணிக்கு பெங்களூர் பேருந்து வந்து நின்றதும், அந்த பொழுதிலும், கர்ம சிரத்தையாக, ஒரு மனிதர் வந்து பொது அறிவுப் புத்தகம், இந்திய வரைபடம், ஆங்கில அரிச்சுவடி என எதையாவது விற்றுக் கொண்டிருப்பார். வியப்பாக இருக்கும். அந்த இரவிலும் ஒரு மனிதர் தனது பிள்ளைகளின் அறிவை வளர்க்க அதனை வாங்கிக்கொண்டிருப்பார். எனது மற்ற மாநில நண்பர்களிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருத்த போது அவர்களுக்கு இது புதிதாக இருந்தது.


சென்னை போன்ற பெரு நகரங்களில் பகல் நேர மனிதர்கள் தங்களது கடமையைச் செவ்வனே செய்ய எவ்வளவோ இரவுப் பறவைகள் தங்களது தூக்கத்தைத் துறந்து உழைத்துக் கொட்டுகின்றன. ஆனால் இந்த இரவுப் பறவைகள் பகல் நேரத்தில் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. பகல் நேர பறவைகளுக்கும் இந்த இரவு மனிதர்களை சிந்திக்க நேரமில்லை.

வெ.நீலகண்டன் அவர்கள் இந்த நூலில், நமது நகர வாழ்க்கையில் சட்டென கடந்து செல்லும் அது போன்ற போல பல விளிம்பு நிலை மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு சற்றே அவர்களின் வாழ்க்கைக்கு உள்ளேயும் செல்கிறார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் எப்பேர்பட்ட மனிதர்களின் வாழ்விலும் ஏதோ வகையில் வந்து சென்று அவர்கள் மனதிலோ, நினைவிலோ எந்தத் தடமும் பதிக்கமால், பதிக்கமுடியாமல் கடந்து செல்லும் பல்வேறு விளிம்பு நிலை மனிதர்களின் தொகுப்பு தான் இப்புத்தகம்.

இப்புத்தகத்தில் விளிம்பு நிலை மனிதர்களுடன், கால் சென்டரில் வேலை செய்பவர்கள், காவற்துறை, விமான நிலையம், அஞ்சல் துறை, தீயணைப்பு துறை, மின்சாரத்துறை ஆகியவற்றில் இரவுப் பணியாற்றும் மனிதர்களின் வாழக்கையைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறார்.

இரவுப் பணியாற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் ஆனாலும் சரி, அரசுத் துறையில் இருப்பவர்களும் சரி, அவர்களை இணைக்கும் ஒரே கோடு பொருளாதாரத் தேடலே! தூக்கத்தைத் தொலைத்து, உறவைத் தொலைத்து, உடலை வருத்தும் இந்த பல்வேறு இரவு மனிதர்களின் ஒரு நாள் இரவை நமது கண் முன்னே நிறுத்துகிறார் ஆசிரியர்.

பகலில் இழந்த தனது அதிருஷ்டத்தை இரவில் குறி சொல்லித் தேடும் குடு குடுபைக்காரர்களாகட்டும்,
சுகமோ துக்கமோ சென்னையின் கீதமான கானாவைப் பாடிப் பிழைப்போராகட்டும்,
சத்தமேயில்லாமல் சென்னையின் அந்நிய செலவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைமுகத் தொழிலாளர்கள் ஆகட்டும்,
கடலுக்குள் கால் பாதிக்கும் மீனவ சமுதாயகமட்டும்,
விடிய விடிய தனது கண்களை அகலத் திறந்து வைத்திருக்கும் காவலாளியாகட்டும்,
செய்தித்தாளுக்கும், பாலுக்காகவுமே எப்போது விடியும் எனக் காத்திருக்கும் பலருக்கு காலையிலே "பால்" வார்க்கும் பேப்பர், பால் பையன்களாகட்டும்,
சென்னை மட்டுமல்ல, சுற்று வட்டார ஊர்களுக்கும் விடிந்தவுடன் பசியாரவைக்கும் கோயம்பேடு சந்தையின் இரவு வாழ்வாகட்டும்,
அம்பத்தூரின் பழைய தொழில்களாகட்டும் அல்லது பள பளக்கும் புதிய கணினி நிறுவனங்களாகட்டும்,
சாலை போடுவோராகட்டும்,
பகலின் குப்பைகளைப் விடிவதற்குள் பெருக்கி அடுத்த நாளின் குப்பைகளுக்கு தயார் படுத்தும் துப்புரவுத் தொழிலாளர்களாகட்டும்...

இப்படி அன்றாட நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக (நா)(மா)றிவிடாமல் இருக்கவும், உயிர்ப்புடன் வைக்கவும் உதவுபவர்கள் இந்த விளிம்பு நிலை மனிதர்களே. நூலாசிரியர் இவ்விளிம்பு நிலை மனிதர்களுடன் தான் சந்தித்ததை சுவைப்பட எழுதியுள்ளதோடல்லாமல், அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளிய காரணங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார்.

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி மட்டுமல்லாமல், மற்ற துறை சார்ந்த இரவுப்பணி அலுவலர்களின் இரவு அலுவலைப் பற்றியும் தொட்டு அவர்களது அன்றாடப் பணிச்சூழலையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

வெ. நீலகண்டன் அவர்கள் எழுது நடை ஒவ்வொரு பத்தியிலும் எளிமையாகத் தொடங்கினாலும் அழுத்தமான கருத்தை எதிர்பாராத சொற்றொடர்களில் வைத்து மிக அழகாக முடிக்கிறார்.

வெ. நீலகண்டன் அவர்களின் இந்தத் தொகுப்பு எனக்கு தெரியாத சில விடயங்களைத் தெரியப்படுத்தியும், என்னை நான் சுய பரிசோதனை செய்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகது.


இனிமேல் வெ.நீலகண்டன் அவர்களின் எந்த ஒரு புத்தகத்தையும் நான் வாங்கிவிடுவேன் என்பதுவும் உண்மை.

தலைப்பு: உறங்கா நகரம்
ஆசிரியர்: வெ. நீலகண்டன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ. 80 /-

Labels: ,