அமிழ்து: September 2008



மெக்சிகோவிலிருந்து... - மெக்சிகன் விசா

Tuesday, September 23, 2008



இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவிற்கு போக வேண்டிய வாய்ப்பு வாராது வந்த மாமணியாய் கிடைத்த போது, முதலில் நினைவுக்கு வந்தது ஆங்கில படங்களில் வரும் கெள பாய் தொப்பி தான்.

பெரிய தொப்பியும், ஷுவும், அதை விட பெரிய மீசையும் வைத்துக் கொண்டு, சற்றே மாநிறமாயும் குதிரை மீதேறி வரும் இவர்களின் ஆடையைக் கழற்றி, வேட்டி, சட்டையை அணிய வைத்தால் இந்தியர் என்றும் சொல்லக்கூடிய அளவில் தான் இருப்பார்கள்.

முதற்படியாக, தில்லி சென்று மெக்சிகன் விசா எடுத்து வர முடிவு செய்தாகிவிட்டது. இதன் மூலம் வட இந்தியாவிற்கு எனது பாதம் பதியும் வாய்ப்பும் கிட்டியது. இந்தி கற்றுக்கொள்ள இதுவரை தேவையில்லாததால், நமது செந்தமிழுடனும், ஆங்கிலத்துடனும் தில்லி சென்றேன். கூட வந்த ஆந்திர நண்பனுக்கும் இந்தி என்பது ஏட்டளவிலே! பையனுக்கு படிக்க வருகிறது, பாவம் இந்தியில் பேச வேண்டுமென்றால் "mute" தான்... இத்தனைக்கும் அவன் பள்ளிப் பருவத்திலிருந்தே இந்தி படித்திருக்கிறான். தில்லியில் கூட படித்தும் இருக்கிறான். நமது அரசியல்வாதிகளைத் திட்டுபவர்களே, எல்லாமே தனி மனித விருப்பம் இருந்தால் தான் கற்றுக் கொள்ளமுடியுமே தவிர யாரும் திணிக்க முடியாது எனபதற்கு இவன் ஒரு சான்று. சரி இதைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வழியாக மெக்சிகன் தூதரகத்தை அடைந்த போது, அந்த வாட்ச்மேன் மிகவும் அன்புடன் வரவேற்றார். இவரைக் கூட மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்திருப்பார்களோ என்றே தோன்றிற்று. நமது ஆந்திர நண்பனே முதலில் இண்டரிவியூக்குச் சென்றான். கேள்விக் கேட்பவர் இந்தியர் தான். என்ன நினைத்தாரோ தெரியவில்லை சரமாரியாக கேள்விகளைத் தொடுத்து ஆந்திர மிளகாயைக் கடித்ததுப் போல் அவனது ஆதி முதல் அந்தம் வரை வியர்க்க வைத்து வேடிக்கைப் பார்த்தார். இருந்தாலும், நமது ஆந்திர நண்பனின் பதில்களால் டர்ஜாகிப் போயிருப்பார் போல, அடுத்து சென்ற நம்மிடம் "மூச்", ஒரு கேள்வியும் இல்லை. நம்மிடமும் கேள்விகள் தொடர்ந்திருந்தால், அவரின் காது மடல்களிலிருந்து குருதி ஒழுகியிருக்கும்! தப்பித்தார்!

ஒரு நாள் கழித்து பாஸ்போர்ட்டைத் திரும்பி வாங்கிக் கொள்ளலாம் என்றதால் சந்தோசமுடன் தில்லி செங்கோட்டை, ஆந்திர பவன், கர்நாடக பவன் (இது எல்லாம் ஆந்திர நண்பனின் ஏற்பாடு தான் சாப்பாட்டிற்காக... ) மற்றும் இந்தியா கேட் என்று சுற்றிப் பார்த்தோம். தில்லி வெயில் சென்னை வெயிலுடன் மல்லுக் கட்டுகிறது.

ஒரு நாள் விட்டு பாஸ்போர்ட்டை வாங்கச் சென்ற போது வாட்ச்மேனுக்கு சரியாக அடையாளம் தெரிந்தது. கலெக்சன் தானே ச்சாலோ என்றார். பாஸ்போர்ட்டை வாங்கி அதில் விசாவைப் பார்த்த போது ஏதோ மெக்சிகோவையே ஸ்பானியர்களிடம் போரிட்டு கைப்பற்றியது போல் உவகையடைந்தேன்.

வாங்கி விட்டு வெளியே வந்த போது, நமது வாட்ச்மேனிடம் ஒரு பையனும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள். ஜாடையைப் பார்த்தால் தமிழாக தெரிந்ததால் அங்கும் இங்கும் நோட்டமிட்ட போது மாட்டியது அவரது கக்கத்தில் இருந்த பை! "செந்தமிழி"ல் ஏதொ ஒரு "டெக்ஸ்டைல்ஸ்" திருக்கோவிலூர் என்று எழுதியிருந்தது. அவர்கள் வாட்ச்மேனிடம் விசாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த வேளையில், அதை வாங்கியதில் ஒரு நாள் அனுபவம் இருந்ததால், டகால் என்று அவர்கள் சம்பாஷனையில் இடையில் புகுந்து எனது கருத்தைப் பதிந்தேன். எங்கோ வடகோடியில் அதுவும் மெக்சிகன் தூதரக வாயிலில் தமிழ் குரல் கேட்க நேர்ந்ததில் ஒரு நிமிடம் கே.பி. சுந்தராம்பாள் குரலைக் கேட்டதற்கிணையாகப் புல்லரித்துப் போனார் அவர். எப்படி நாங்க தமிழுனு தெரியுமுனு வெள்ளந்தியான அவரது கேள்விக்கு அறிவு ஜீவித்தனமான நமது பதிலைப் பார்த்து அவர் ஆடிப்போனாலும், பையன் ஏற இறங்க எங்களிருவரையும் பார்த்து விட்டு உள்ளே அப்பாவை இழுத்துக் கொண்டு போனான்!

Labels: ,