அமிழ்து: சிங்கம்-2 பார்த்த அனுபவங்கள்...



சிங்கம்-2 பார்த்த அனுபவங்கள்...



ரொம்ப லேட்டாக படத்துக்கு செல்ல நினைத்ததால், பக்கத்திலிருக்கும் ராக்லைன் மல்டிப்ளெக்சில் டிக்கெட்டுகளைத் தேடிய போது, இரண்டு திரையில் ஓடினாலும் இரவு 9:30 மணி மற்றும் 10:05 மணி இரண்டு காட்சிகளுமே கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது... கடைசியாக 10:05 காட்சிக்கு ரிசர்வ் செய்தாகிவிட்டது...

9:45-க்கு அங்கே சென்றால் பார்கிங் இடம் நிரம்பி வழிந்தது... ஒரு மாதிரியாக வாகனத்தை நிறுத்தி விட்டு மேலே சென்றால், முந்தைய காட்சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. தமிழர், கன்னடியர், தெலுங்கர், மலையாளி என அனைவரும் வந்திருந்தனர். கதவுக்கு வெளியே  எல்லோரும் காத்திருந்தோம்...

ஒருவர் கதவைத் திறந்த உள்ளே செல்ல முயன்ற பொழுது உள்ளேயிருந்து qube சவுண்ட் சிஸ்டமில் உஃப், புஃப், பஃப் என சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது... டி.வி. ட்ரைலரில் "ஒரு பயலும் தப்ப முடியாது" என்று சூர்யா கர்சித்தது மைல்டாக ஞாபகம் வந்து படம் பார்ப்பவர்களையும் விட மாட்டார் என்று கன்பார்ம் செய்தது...

ஒரு வழியாக உள்ளே சென்று  திரையிலிருந்து 4-வது வரிசையில் அமர்ந்தோம். சூர்யா காலையும், கையையும் தூக்கி நடக்கும் போதும் அடிக்கும் போதும் 4-டி இல்லாமலேயே நம்மீது அடி இறங்குவது போல இருந்தது...

இடைவேளைக்கு முன்பே திடீரென படத்தை நிறுத்தி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பு வெளியானது... சிங்கம் 2 உள்ளேயிருக்க, இன்னொரு சிங்கம் வெளியே இரசிகக் கண்மணிகள் பார்கிங் கிடைக்கமால் அவசரத்தில் சாலையிலேயே நிறுத்தி விட்டு வந்த கார்களை அள்ளிக் கொண்டு செல்வதை அறிவித்தார்கள். இரண்டாம் காரின் எண்ணை வாசித்துக் கொண்டிருந்த போதே இரசிகர்கள் பொறுமையிழந்து படத்தைப் போடச் சொன்னார்கள்.

இதுவரை துரைசிங்கம் திரையில் சட்டத்திற்கெதிராக நடப்பவர்களை துவம்சம் செய்தததை ஆர்வமுடன் இரசித்துக் கொண்டிருந்த எங்கள் வரிசையில் இருந்த ஒருவரின் காரின் எண்ணும் படிக்கப்பட, அள்ளிச் சென்ற காவல் துறையினரை வசவிக் கொண்டே, ஒரு கண்ணில் துரைசிங்கத்தின் சாகசத்தைத் தவற விடாமல் பார்த்துக்கொண்டே சென்றார்.

மீண்டும் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திற்குள்ளாகவே திரும்பவும் நிறுத்தி விட்டு கார்களின் எண்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது, ஏற்கனவே திரையில் பார்த்த துரைசிங்கத்தின் பஞ்ச் டயலாக்குகளும், அவரது ஆக்ஷ்னும் சேர்ந்து எங்களது இரத்தத்தின் சூட்டை ஒரு இரண்டு டிகிரி ஏற்றியிருக்க, ஒட்டு மொத்தமாக எல்லா பொது ஜனங்களும் சேர்ந்து அவரவர் மொழிகளில் இந்த அநியாயத்தை ஓ ஓ ஓ என்று கத்தி தட்டிக் கேட்டோம்.

ப்ரொஜெக்டர் பின்னால் உட்கார்ந்திருந்த ஆப்பரேட்டருக்கு மேலே இருந்து பார்த்தப் போது ஒரு நானூறு துரைசிங்கங்கள் ஒன்றாக கர்சித்து நிற்பது போல இருந்ததோ என்னவோ உடனே படத்தைப் போட்டு விட்டார்.

இடைவேளையிலும் விடாமால் ஒரு துண்டுச் சீட்டில் எண்களை எழுதி இருக்கையில் உட்கார்ந்திருந்த அனைவரிடமும் காட்டி, அவர்கள் அந்த கார்களுக்கு சொந்தக்காரர்களை கண்டறிய கஜினி முகமது போல எங்களை நோக்கி படையெடுத்த வண்ணமே இருந்தார்கள்.

இதற்கிடையே படமும் நகர்ந்த வண்ணம் இருந்தது. முடிவில் துரைசிங்கம் தான் சபதம் செய்ததைப் போல டேனியை தென் ஆப்பிரிக்காவில் கைது செய்து இந்தியா கொண்டு வந்து, அனுஷ்காவைப் பார்த்ததும் டூயட் பாடப் போகிறார் என்ற ஒரு இக்கட்டான நிலையில் படம் முடிந்தது.

அதிர்ஷ்டவசமாக, துரைசிங்கம் சொன்னதைப் போலல்லாமால் அவரிடமும் தப்பித்து, வாகனத்தை தவறான இடத்தில் நிறுத்தி ஒரு சிலரைப் போல வெளியே நின்ற லோக்கல்  சிங்கத்திடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து, ஒன்றரை மணிக்கு பத்திரமாக வீடு வந்து சேர்ந்து, படுத்தால்... சிங்கம் 3-யும் ஹரி எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், சின்னத்திரையின் நாதஸ்வரம், தென்றல் போன்ற மெகா சீரியல்கள் போல, பெரிய திரையில் மெகா சினிமாக்களாக எடுத்து தமிழில் ஒரு ட்ரண்ட் உருவாக்கப் போகிறாரோ என்று  தோன்றிய சந்தேகத்திலிருந்து மட்டும் தப்ப முடியவில்லை...:)
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment