அமிழ்து: October 2012



வீட்டிற்கு வந்த டையனோசர்...!

Saturday, October 27, 2012




புதியதாக வாங்கிய தொலைக்காட்சியைப் பொருத்துவதற்காக அந்த கம்பெனியிலிருந்து ஒரு டெக்னீஷியன் வரவேண்டும். வாங்கிய மூன்றாம் நாள் அதாவது ஒரு செவ்வாய்க்கிழமை மாலை ஆறரை மணிக்கு, நான் எனது வீட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எனது அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு பேச ஆரம்பித்தேன்.

அவர் தனது பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். "டையனோசர்" என்பது போல் எனது காதில் விழுந்தது. போக்குவரத்து இரைச்சல் சற்றே அதிகமாக இருந்ததால் நமது காதில் தான் ஏதோ சரியாக சேரவில்லை என்று நினைத்துக்கொண்டு, பேரா முக்கியம்... இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறேன்.. உடனே  வீட்டிற்கு வர இயலாது. நீங்கள் நாளை வாருங்கள் என்றேன். வழக்கம் போல் நாளை எனபது வந்தால் தான் நிச்சயமாக இருக்க... மாற்றி மாற்றி அவரை (டையனோசரை (!) ) அழைத்து சனிக்கிழமை மதியம் என்று பிக்ஸ் செய்தேன்.

இதற்கிடையில், எனக்கு பெருத்த சந்தேகம்... ஒரு மனிதனுக்கு விலங்கு பெயரை வைப்பார்களா? இருக்கலாம்... எனக்கு தெரிந்த ஒரு பையனுக்குக் கூட "காளை" என்று பெயரிருந்தது... கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத அந்த ஊரில் என்னுடைய பால்ய காலத்தில் இருந்த போது, எங்களைப் போன்ற சிறார்களுக்கு அவன், பெயரைப் போலவே முரட்டுக் காளையாகவே தெரிந்தான்.

சமீபத்தில் கூட சிவக்குமார் புதல்வர்கள் சிங்கம், சிறுத்தை என்றப் பெயர்களில் புழங்கி படங்கள் வெளி வந்தனவே. ஆண்களுக்கு மட்டுமா விலங்குகள் பெயர்கள் வைக்கிறார்கள்? பெண்களுக்கும் கூட மயிலு, குயிலு, சிட்டு என்று பெயர்கள் வைத்து பறவைகள் போல கூவவும் விடுகிறார்கள்...

இந்த பெயர்களெல்லாம் கூட பரவாயில்லை. நாம் வாழும் காலத்தில், அவ்விலங்குகளின் குணாம்சத்தால் கவரப்பட்டோ அல்லது வேறு பல காரணங்களாலோ அவர்களது பெற்றோர்கள் வைத்திருக்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக நம்பப்படும் டையனோசரால் ஒரு தகப்பனோ, ஒரு குடும்பமோ கவரப்பட்டு அப்பெயரை தனது அடுத்த தலைமுறைக்கு வைக்குமா?

ஒரு வேளை இவர் அரியலூர் பகுதியைச் சேர்ந்தவரா? எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் அரியலூரில் மட்டும் தான் டையனோசர் சுவடுகள் கண்டிப்பிடித்ததாக நினைவு. இவரது மூதாதையர்கள் யாரும் டையனோசரை செல்லப் பிராணியாக தங்களது வீட்டில் வளர்த்திருக்கலாம். ஏதோ ஒரு சந்தர்பத்தில் தனது உயிரை விட்டு, அந்த டையனோசர் இவர்களது குடும்பத்துக்கு உதவியிருக்கலாம். அதன் நினைவாக, வழி வழியாக தனது வம்சத்தில் ஒருவருக்கு டையனோசர் என்று பெயர் வைக்க வேண்டும் என்பது மரபாயிருக்கலாம்...? ;)

டையனோசர் என்பது கூட தொண்ணூறுகளின் மத்தியில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படத்தின் மூலமே சாமானிய மக்களுக்கிடையிலும் பிரபல்யம் அடைந்தது. வரும் இந்த டெக்னிசியன் தொண்ணூறுகளின் மத்தியில் பிறந்திருப்பதற்கும் வாய்ப்பு சற்று கம்மியாக இருக்கிறது. அல்லது தமிழ்நாட்டில் நடிகர்களின் தீவிர விசிறிகள் தங்களது பெயர்களை ரஜினி சிவா, கமல் குமார் என்று பெயர் வைத்துக் கொள்வார்களே அது போல இந்த டெக்னிசியனும் டையனோசரால் கவரப்பட்டு டையனோசர் என்று வைத்துக் கொண்டாரோ?!

டையனோசர் என்ற இவரது பெயரை அலுவலகத்திலும், வீட்டிலும் முழுமையாகத் தான் கூப்பிடுவார்களா? "டை" அல்லது "டையன்" என்று கூப்பிடுவார்களா? "டை" என்று எப்படி சொல்ல முடியம்? இப்படியாக நான்கு நாட்களில் தொலைக்காட்சியைப் பொருத்துவதை விட "டையனோசர்" என்று பெயர் தாங்கி நிற்கும் இந்த மனிதனைப் பார்க்கும் ஆர்வமே அதிகமாகிவிட்டது.

சனிக்கிழமையும் வந்தது. எங்கே மறந்து விடுவாரோ என்று காலையிலேயே ஒரு முறை அழைத்து நினைவூட்டினேன். அப்போது கூட அவரது பெயரை வைத்து என்னால் உறுதியாக அழைக்க முடியவில்லை. இன்று கண்டிப்பாக வந்து விடுவேன் என்றார். டையனோசருக்காக காலையிலிருந்து காத்திருந்தேன்.

அவரிடமிருந்து தான் அழைப்பு வந்தது. "டையனோசர்"... எப்படி சார் வர்றது என்று வீட்டுக்கு பக்கத்தில் நான் சொன்ன "லேன்ட் மார்க்"-லிருந்து கேட்டார். நீங்கள் அங்கேயே இருங்கள் நான் வந்து பிக்-அப் செய்கிறேன் என்று சொல்லி அவர் நின்ற இடத்திற்கு சென்றேன்.

பரஸ்பர அறிமுகம்... இப்போது கூட "டையனோசர்" என்று சொல்லி கைக் குலுக்கினார். ஆள் நாற்பதுகளின் தொடக்கத்தில் தான் இருக்க வேண்டும் கண்டிப்பாக தொண்ணூறுகளின் மத்தியில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. குங்குமப் பொட்டு வேறு வைத்திருந்தார். பார்த்தால் சினிமாவின் பரம விசிறி டைப் என்றும் சொல்வதற்கில்லை.

இப்போது கூட பேரை வைத்து அழைக்காமல் நீங்க, வாங்க என்று சமாளித்து விட்டேன்.

எல்லாம் முடிந்து கிளம்ப தயாரானார். எனக்கு "டையனோசர்" பெயர் காரணம் தெரியவில்லை என்றால் அன்று தூக்கம் வருமா தெரியவில்லை...

தொலைக்காட்சியில் எந்த பிரச்சினை என்றாலும் என்னை அழையுங்கள். அதே நம்பர் தான் என்றார்.

இப்பொழுது கேட்டேன்... சாரி, உங்க பேர திரும்பி ஒரு முறை சொல்றீங்களா?

டையனோசர்...

என்னது...? என்றேன் நான் திரும்ப...

டையனோசர்...?!

இல்ல, கொஞ்சம் மெதுவா சொல்லுங்க.. 

தயானந்த் சார்...என்று சொல்லி அவர் கிளம்ப...

நான் மட்டும் தயானந்த் சார், தயானந்த் சார் என்று  திரும்பி திரும்பி சொல்லிப் பார்க்க "ந்த்" கழன்று தயானசார், தயானசார் என்றாகி சிறிது நேரத்தில் டையனோசர் என்று செட்டில் ஆனது...

உங்களுக்கு... ;) ? !

Labels: ,

Thursday, October 25, 2012
"தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்"



க்ரியா பதிப்பகம் 2004 -ல் மொழிப் பெயர்த்து
(தமிழில்: வெ. ஸ்ரீராம்) வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவரான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியர் பூர்தியு அவர்களின் "தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்" என்ற புத்தகத்தை க்ரியாவின் இணையதளத்தின் மூலம் ஒரு மாதம் முன்பு வாங்கினேன்.

நூற்று சொச்சப் பக்கங்களே இருந்தாலும் இந்தப் புத்தகத்தை இன்னும் முடிக்க முடியாமல் இருக்கிறேன். புத்தகத்தின் கருத்துச் செறிவு அப்படி. ஒரே பக்கத்தை ஒரு முறைக்கு பல முறை படிக்கிறேன். இது தொலைக்காட்சி என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ்ச் சூழலில் இது அச்சு ஊடகத்திற்கும் பொருந்துகிறது.

1996 ல் முதலாவதாக பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் பியர் பூர்தியு கூறியுள்ள கருத்துகள் தற்கால தமிழகத்தின் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது. அதைச் சற்றே இந்தக் காலத்து தமிழ் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கிறேன்.

பியர் பூர்தியுவின் சில கருத்துக்களும், தமிழ்ச் சுழலுக்குப் பொருத்திப் பார்த்தலும் ...

பியர் பூர்தியு: 
 
"கவலைப்படாமலேயே நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள ஒப்புக்கொள்வதன் மூலம் எதையும் சொல்வதற்காக அவர்கள் அங்கு இருக்கவில்லை என்பதையும், ஆனால் வேறு பல காரணங்களுக்காக, குறிப்பாக, தங்களைக் காண்பித்துக் கொள்ளவும் மற்றவர்களால் பார்க்கப்படுவதற்காகவும் தான்..." இருத்தல் என்பது மற்றவர்களால் பார்க்கப்படுவதுதன் என்று பெர்க்லி-யை மேற்கோள் காட்டுகிறார். தொலைக்காட்சித் திரை சுயமோகிக்கான ஒரு நார்சிசஸ் கண்ணாடியாக, சுயமோகத்தைக் கண்காட்சிப்படுத்துவதாக இன்று ஆகிவிட்டது.

தமிழ்ச் சூழல்:  
 
இதை நமது தமிழ் ஊடகங்களில் வரும் கருத்துச் சொல்லிகளைப் பொருத்திப் பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் திரும்பத் திரும்ப ஒருவர் தனது முகத்தைக் காட்ட பிரயத்தனம் செய்ய வேண்டியதில்லை... நீயா நானா போன்ற நிகழ்சிகளில் அழைக்கப்படும் பிரபல்யங்களைத் தவிர நன்றாகப் பேசும் கூட்டதிலிருப்போருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுகிறது. இவர்களால் எந்த ஒரு விடயத்துக்கும் நேரிடையாகவோ அல்லது எதிராகவோ பேச முடியும். இங்கு கொள்கை, கருத்து என்பதெற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை... முகங்காட்டுவதே முக்கியமாகிறது...

பியர் பூர்தியு: 
 
எல்லோருக்கும் முக்கியமானது போல் இருக்கும் விஷயங்கள் மீது கவனத்தைத் திருப்புவது. இவற்றை ஆம்னிபஸ்  தகவல்கள் என்று சொல்லலாம். இந்த தகவல்கள் யாரையும் திடுக்கிடவைக்காதவை; கட்சிப் பிரிக்காதவை; ஒப்புக் கொள்ளும் தன்மை கொண்டவை... துணுக்குச் செய்தி... தகவல் சரக்கு... நேரம் என்பது சொலைக்காட்சியில் மிகமிக அரிதாகக் கிடைக்கப்பெறும் சரக்கு. இவ்வளவு பயனற்ற விஷயங்களைச் சொல்வதற்கு இவ்வளவு பொன்னான நிமிடங்களைச் செலவிடுவது ஏனென்றால், பொன்னான சில விசயங்களை மறைக்கிற காரணத்தினாலேயே பயனற்ற இந்த விசயங்கள் மிகவும் முக்கியமானவையாகின்றன என்பதால் தான்.

தமிழ்ச் சூழல்:
 
தமிழகத்தில் மக்கள் அறிய வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, எந்த ஒரு செய்தி நேரத்திலும் "சைனாவின் வினோத மனிதன்" என்றோ மெக்சிக்கோவின் நாய்ச் சண்டைப் பற்றியோ முற்றும் முழுவதுமாக செய்தி நேரத்திற்கு சுவைச் சேர்க்கவோ இன்னப்பிற காரணங்களுக்காகவோ பொன்னான செய்தி நேரம் உபயோகப்படுத்தப்படுகிறது.

பியர் பூர்தியு: 
 
காட்டப்பட வேண்டியதே காட்டுவது போல் இருந்தாலும், அதைக் காட்டும் விதத்தில் அது காட்டப்படாமலேயே போய்விடுகிறது... அல்லது அந்தத் தகவல் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் எதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு அர்த்தம் அதற்குக் கற்பிக்கப்பட்டு விடுகிறது. 

தமிழ்ச் சூழல்:  
 
சமீபத்தில் தமிழக முதல்வர் அமைச்சர்களை மாற்றிக் கொண்டிருந்த வரிசையில் சபாநாயகரையும் மாற்றியது விவாதத்துக்கு உள்ளான pOthu தினமலர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி புதிதாக வரப் போகும் சபாநாயகரின் சாதியைப் பெரிது படுத்தி ஆளும் வர்க்கத்துக்கும் நல்ல பிள்ளையாகவும், படிப்பவர்களுக்கும் வேறு வித அர்த்தத்தைக் கற்பித்தது.


பியர் பூர்தியு:   துறைச் சார்ந்த அங்கீகாரம்
 
சிலருக்கு மக்களிடையே பிரபலமடைவதற்கு தொலைகாட்சி ஊடகங்கள் உதவி செய்து அதன் மூலம் எழுத்தாளர்களாகவோ, பாடகர்களாகவோ, நாட்டியக்காரர்களாகவோ அங்கீகாரம் அளிப்பதன் மூலம் காலம் காலமாக இந்தத் துறை சார்ந்த அங்கீகாரம் அளிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் தொலைக்காட்சி போட்டியில் இறங்குகிறது. இதனால் அங்கீகாரம் பெறத் தேவையான தகுதிகள் என்ன என்பதில் குழப்பம் ஏற்படுகிறது...

தமிழ்ச் சூழல்:  
 
தமிழ்ச் சூழலில் பல்வேறு தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற பேச்சாளர்கள், இசை மற்றும் நாடிய போட்டிகளில் வரும் நடுவர்கள்...

பியர் பூர்தியு:  மிகைப்படுத்துதல்
 
சாதாரண சொற்களைக் கொண்டு நகர்புற நடுத்தர வர்க்கத்தையோ, பாமர மக்களையோ வாய்ப் பிளக்க வைக்கமுடியாது. அதற்கு அசாதாரணமான சொற்களைப் பயன் படுத்த வேண்டும்.

தமிழ்ச் சூழல்:  
 
தமிழ்ச் சூழலில் செய்திகளில் உபயோகிக்கப்படும் "இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது" போன்ற பிரயோகங்கள்.

பியர் பூர்தியு: 
 
பரபரப்பை நம்பியிருக்கும் பத்திரிக்கைகளின் பிரதான மேய்ச்சல் நிலமான துணுக்குச் செய்திகளும் இரத்தமும் பாலியலும் திடுக்கிடும் நிகழ்வுகளும் குற்றங்களும் எப்போதுமே நன்றாக விலை போயிருக்கின்றன. 

தமிழ்ச் சூழல்
 
இரவு பத்து மணிக்கு மேல் வரும் குற்றம் நடந்தது என்ன, போலிஸ் டைரி போன்ற நிகழ்ச்சிகளும் வருணனையாளர் அதை விவரிக்கும் அமானுஷ்ய என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களும்...

இதை பகுதி ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம், மீதிப் பக்கங்களையும் படித்து விட்டு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

Labels: , ,