அழகுச்சங்கிலி
Wednesday, April 11, 2007எனக்கு அழகாய்ப் படுவது எது என யோசிக்கையில் இயற்கையழகுகள் தான் மேலோங்கி நிற்கிறது.
தங்கமாய் மாறும் சூரிய கதிர்கள்!
சிறு வயதில் கோடை விடுமுறைக்கு திருச்சி முக்கொம்பு அருகிலுள்ள ஊருக்குச் செல்வோம்! கோடை மாலையில் குளியாலாட அங்கும் இங்குமாய் ஆரவாரமற்று ஓடி வரும் காவிரிக்குச் செல்வோம்... தன் கடமையை அன்றும் செவ்வனே முடித்துவிட்ட திருப்தியுடன் வீட்டுக்கு திரும்பும் சூரியனார் தன் கதிர்களை தண்ணீரில் பரப்பி தங்கமாய் மாற்றும் அழகே அழகு! பார்த்துக் கொண்டேயிருக்கலாம்!
அடை மழை!
சிறு தூரல் நச நச...! பெரு மழை குளு குளு! பேருந்தின் உள்ளே கண்ணாடி போட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டோ மாடி வீட்டின் மாடத்திலிருந்தோ பார்க்கும் போது பெய்யும் அடை மழை அழகோ அழகு!
யானை நடை!
தூண் போன்ற நான்கு கால்களையும் தூக்கி தூக்கி, காதுகளை ஆட்டி வரும் யானையின் அசமந்தமும் அழகே அழகு! சிறு வயதில் வீடு தேடி மணியோசையோடு வரும் யானை என்றுமே அழகு தான்! யானைப் போன்று நடந்து வரும் மனிதர்களைப் பார்ப்பதும் எனக்கு அழகாகவே தெரிகிறது :))
அதிகாலை நகரத்து சாலைகள்!
பகல் நேரங்களில் பர பரத்துக் கிடக்கும் நகரத்துச் சாலைகள் அமைதியாய் அதிகாலையில் இளைப்பாறும் அழகு அருமை. இதற்காகவே பல நாட்கள் எனது அதிகாலைத் தூக்கத்தை துறந்துள்ளேன்.
கிராமத்து வயல்வெளி
நீண்டு செல்லும் மண் சாலையும், அதனை ஒட்டியே நெல் வாசனையோடு கூடவே வரும் வயல்வெளியும் எனக்கு என்றும் மாறா அழகு. உம்ம்ம்... ஆனால் இப்பொழுதெல்லாம் அது போன்ற கிராமங்களுக்கு சென்று ரொம்ப நாளாகிறது.
பயணம்!
பயணம் எப்போதுமே எனக்கு அலாதியான அழகுதான். புது மனிதர்கள், புது சாலைகள்.... வண்டியின் ஜன்னல் நொடிக்கொருமுறை அள்ளித் தெளிக்கும் காட்சிகள் அழகே அழகு!
நான் இந்த அழகுச் சங்கிலிக்கு அழைக்க நினைப்பது
1. மு. கார்த்திக்கேயன்
2. துளசி கோபால்
3. நாமக்கல் சிபி
Labels: azhagu, azhakuchangili